தாட்சாயணியின் 'ஒரு மரணமும் சில மனிதர்களும்'-மானஸாஜென்.

ஒரு மரணமும் சில மனிதர்களும்
ஒரு வாசிப்பும் சில கருத்துகளும்!
மானஸாஜென்



காரிருள்...ஏதோ அரவம் உங்களுக்கு அருகில்...பயமும், திகைப்பும், ஆர்வமுமாய், தீக்குச்சியைப் பற்றவைத்து ஊன்றிக் கவனிக்கிறீர்கள்!
பொன் பூத்த வெளிச்சத்தில் அழகின் அற்புத விசிறலும், கடவுளின்
கனிவினை ஏந்திய கண்களுமாய், ஒரு சின்னஞ்சிறு மழலை, தன் புன்னகையால் உங்களைக் கிறங்க அடிக்கிறது. உன்மத்தம் ஏறிய நிலையில் மர்மமாய்த் துலங்கும் அந்த அழகினை என்றென்றைக்கும் நிறுத்திக் கொண்டாட வேண்டி, தீக்குச்சி அணையும் முன்னர் புகைப்படம் எடுக்க விழைகிறீர்கள்....

நல்ல எழுத்து என்பதை அத்தகைய கணத்தை நிரந்தரமாக்க விழையும் ஒரு நிழற்படம் எனலாம்.

உத்தி, வார்த்தைகள், தொனி, வடிவம் ஆகியவற்றை புகைப்படக் கருவியோடு ஒப்பிடலாம். உள்ளுணர்வு, அழகியல், கலைமனம், தேடல் ஆகியவற்றினால் அடையும் ஒளியே பரவச அனுபவத்தை காட்டித் தருகிறது.


தொழில் நுட்பம், கலைத்திட்பம் இரண்டும் பொருந்தும் கச்சிதமே படைப்பை உன்னதமாக்குகிறது. கச்சிதத்தை இழந்த கதை அற்புத கணங்களை நீர்க்க விட்டு தீக்குச்சி எரிந்து கரிந்த பின் புகைப்படத்தை எடுத்தார் போலக்கெடும்.


சுருங்கக் கூறின் ஒரு நல்ல படைப்புதன் வாழ்வின் சாரத்தில் பரவசமூட்டிய கணங்களைக் கருவாக்கித் தேவையான அளவிற்கு, தேர்ந்தெடுத்த வரிசையில் சரியான சொற்களை உபயோகிப்பதன் மூலமாக சொல்ல முடிவதைக் கொண்டு சொல்ல முடியாத அரூபத் தளங்களின் திறப்புகளைக் காட்டித்தருகிறது.

@ @ @

தாட்சாயிணியின் 'ஒரு மரணமும் சில மனிதர்களும்' சிறுகதைத் தொகுதியில், சமூக அமைப்புகளுக்குப் பணிந்து வாழும் பெண்ணின் வாழ்க்கைச் சூழலின் பல்வேறு பட்ட காட்சிகள் அவதானிக்கக் கிடக்கின்றன. கரிசனமும், அக்கரையும்கொண்ட பதிவுகள். போர் ஒரு மாபெரும் பின்புலமாய் சம்பவங்களின் கோர்வைகளையும், அதனூடே பெறப்படும் அர்த்தங்களையும் மாற்றிப் போடுகிறது. வேறெங்கும் நாடகத்தனமாய் துருத்தக் கூடிய சம்பவங்கள், இலங்கைத் தமிழரின் அவல வாழ்வியல் சூழலில் இயைந்து பொருந்திப் போகிறது.


'விடுபடல்' , 'சோதனைகள்', 'வெடிக்காய்', 'தீவிளிம்பு', 'ஒரு மரணமும் சில மனிதர்களும்', போன்ற சிறுகதைகள் இவரை சராசரி கதை சொல்லிகளிலிருந்து ஒருபடி மேலேயே வைக்கின்றன எனினும் அனுபவங்கள் அதன் ஆழத்தில் ஊடுருவிப் பொதுத் தளத்திற்கு திறவு கொள்ளாமல் முடிந்துப் போய்விடுகின்றன. தேவைக்கும் அதிகமாக விரயம் செய்யப் பட்ட வரிகள் தாளலயத்தில் இசைக்கேடான ஸ்வரங்களை எழுப்பி தேர்ந்த கலைப் படைப்பு நிகழ்த்தக் கூடிய் சூட்சுமப் பாய்ச்சலை வெறும் அனுபவங்களாகக் குறுக்கிப் போடுகின்றன. கலை அமைதி கூடிவந்த வெடிக்காய், விடுபடல் போன்ற கதைகளிலும் கூட இத்தகைய குறைபாடுகள் உண்டு.


'விடுபடல்' கதையை , வண்ணதாசனின் 'சில பழைய பாடல்கள்' சிறுகதையுடன் ஒப்பிட்டு வாசித்துப் பார்த்து புதிய இடங்களை அடையலாம். வெடிக்காய், காயங்கள் பட்டு கன்றிப் போய் பெரியவர்களாய் வளர்கையில் நாம் தொலைத்து விட்ட விளையாட்டுப் பருவங்களையும், சகமனிதர்களின் மீதான நேசத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது. அதே வேளையில் நேசமிழந்து பெரியவர்களான நம்முடைய முரட்டு விளையாட்டுகளையும்.


சோதனைகள் பெண்களுக்கேயான துயரத்தை பதிவு செய்யும் கணத்தில், சகமனிதர்களின் கருணையையும் பதிவு செய்து, மனிதனை விரிவு கொள்ளச் செய்யும் பண்பினைக் கதையாக்குகிறது. கிட்டத்தட்ட இதே கதையினை மறுபடியும் எழுதிப் பார்த்தது போல 'பெண்' எனும் சிறுகதை.



'துளிர்ப்பு' ,'ரங்கனாதனும் ரஞ்சித் பெரேராவும்', பொன்ற கதைகள், தங்களின் கருப் பொருளின் தேர்வால் பலம் கொண்டதானாலும், அதனுடைய நேரடித் தன்மையினால் அறிவுறுத்தும் தொனியையும், நாடகத்தன்மையையும் கொண்டு சுருங்கிப் போகின்றன. இவற்றோடு ஒப்பிடுகையில் சிறுவனின் கோணத்திலிருந்து சொல்லப் படும்'வெளியில் வாழ்தல் ' மேலான கதை.



@ @ @

தாட்சாயணியின் 'ஒரு மரணமும் சில மனிதர்களும்'-ரெ.பாண்டியன்


தாட்சாயணியின் "ஒரு மரணமும் சில மனிதர்களும் "
ரெ.பாண்டியன்

ஒரு சிறுகதை கடைசி வரியில் முடிவதில்லை. அவ்வாறு முடியும் கதைகளின் கடைசி வரி நீதி கதையின் ஒரே அர்த்த தளமாக முடிந்துவிடுகிறது. ஆனால் 'முடிந்தும் முடியாத' போது, கதை சொல்ல வருவது என்ன என்பது வாசகனின் வாழ்க்கை அனுபவம் சார்ந்து விரிந்துகொண்டே போகும். இதைச் சாதிப்பதே எப்போழுதும் ஒரு சிறுகதை ஆசிரியனின் அதிகபட்ச சவலாக இருக்கிறது.

நவீனத்துவ கதைசொல்லலின் தொடக்கமே இந்த ஒரு தளத்தினாலான நீதி என்கிற கறுப்பு-வெள்ளை கற்பனைக் கோட்டினை நிராகரித்துவிட்டு முன்னே நகர்வதுதான். 'வெடிக்காய்', 'வெளியில் வாழ்தல்', 'விடுபடல்' ஆகிய கதைகள்நவீன கதைசொல்லலின் சாதனைச் சுவடுகளின் திசையில் காற்றடிப்பவை. "தீ விளிம்பு" கதையின் முடிவு இன்னும் கூர்மைப்படுத்தப்படும் பட்சத்தில், அக்கதைக்கும் கொடியேற்றம்தான்.

உள்ளடக்கம்தாட்சாயணியின் கதைகளை இவ்வாறு பிரித்துவிடலாம் :
அ) 'விடுபடல்' , 'பெண்' , 'ரிக்கெற் ஷோ' ஆகியவை போர்ச்சூழல் தவிர்த்த மக்களின் அன்றாட விஷயங்களைப் பற்றி பேசுபவை.ஆ) தொகுப்பில் உள்ள பிறகதைகள் அனைத்தும் போர்ச்சூழலின் பின்னணியில் தனிமனிதர் படும் அவதியை, அவமானத்தை, உறவுகளை அநியாயமாக இழப்பதை, மௌனமாக ஜீரணிக்கவேண்டிய பலாத்காரத்தை - இவ்வளவு துன்பத்திலும் மண்ணைவிட்டு அகலமறுக்கும் முதியவர்கள், மற்றும் இளம்தலைமுறையினரைப் பற்றி பேசுபவை.

உருவம்'சிறுகதையின் ரூபம் கதை எழுதுபவரின் மனோதர்மத்தைச் சேர்ந்தது ' என்றார் புதுமைப்பித்தன். தாட்சாயணி கதைகளில்ஒரு குழந்தைச் சிறுவனின் கள்ளங்கபடற்ற தன்மையிலும் , ஒரு இளம்பெண்ணின் அடங்கின குரலிலும் கதையின் உருவம்நிறுவப்படுகிறது. ஆனால், இந்த அடங்கின குரல் கதையின் நுட்பத்தை கூர்மைப்படுத்த அதிக சிரத்தை எடுப்பதில்லை. நவீன தமிழ் கதை சொல்லலில் வாசகனுக்குச் சாதாரணமாகிப்போய்விட்ட ஆசிரியரின் நுட்பமான கதை நகர்த்தல்கள் தாட்சாயணியின் கதைகளில் அநேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.

அனைத்து கதைகளிலும் அந்த மண்ணில் வாழ்ந்து பார்த்த அனுபவத்தின் தெறிப்பு இருக்கிறது; குறைவுபட்ட அனுபவத்தை இட்டுக்கட்ட வார்த்தை ஜோடனைகளின், தத்துவ முலாம்களின் துணையை நாடாதவை இவை. இந்த அவரது படைப்பு அம்சமே அவரது கதைகளின் உருவத்துக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது.
கதைகளைப்பற்றி'ஒரு மரணமும் சில மனிதர்களும்' கதையில் கடைசி 9 பாராக்களை

"அம்மம்மா கேவிக்கொண்டிருந்தா.
படலையடியில் பறை பலமாய் முழங்கத் தொடங்கிற்று.
அம்மம்மாவுடையதும் ராசாத்தியுடையதும் குரல்களும் உச்சமாய் ஓங்கித் தளும்பின."
என்று 3 பாராக்களில் முடித்திருந்தால், கதை சொல்ல வரும் செய்தி ஒரு மலரிதழ் விரிவதுபோல் நுட்பமாய் வாசகனில் அந்த சூழலின் கொடூரம் பற்றிய ஒரு தத்தளிப்பை உருவாக்கியிருக்கும். ஆனால், அந்த 9 பாராக்கள் கதையை ஒரு செய்தியைப் போல முடித்துவிடுகின்றன.
ஏற்பட்டிருக்கவேண்டிய தாக்கத்தை "ஓ, இப்படித்தான் அங்கு துக்கத்தை வெளிப்படுத்த முடிகிறதா.." என்ற ஒற்றைப்படையான எண்ணமாக அந்த 9 பாராக்கள் சுருக்கிவிடுகின்றன.

'சோதனைகள்', 'வெடிக்காய்', 'மழை', 'தீ விளிம்பு ' ஆகியவற்றில் போர்க்களத்தில் 'பங்கேற்காதவர்களுக்கு' இடமில்லை என்கிற நடைமுறை யதார்த்தம் நிர்தாட்சண்யமாய் உணர்த்தப்படுகிறது.

'சோதனைகள்' : ஒரு பார்வையாளராக தினமும் சாவடிகளை கடந்துகொண்டிருந்தவள், மனதை உலுக்கும் அவமானத்திற்கு உள்ளான பிறகு, அவள் இந்த போர்ச்சூழலால் மனரீதியாக பாதிப்படைந்தவளாகிறாள்.
அவளுக்கு ஆதரவாய் வரும் புதியவள் "சனியன் பிடிச்சவள், என்ன வேலை செய்துபோட்டாள்" என்றவள் "ஓம், நீ படு பிள்ளை" என்பதோடு நிறுத்திக்கொள்கிறாள். இது போன்ற துக்கத்திற்கு, வாழ்க்கை தந்துதவும் நிவாரணமாக அந்த பஸ் கூட்டத்திலிருந்து முகம் தெரியாத ஒருத்தி முன்வருகிறாள். இக்கதையின் வாசகன் செய்ய முடியாத காரியத்தை,அவனது சார்பில் அவள் செய்கிறாள்.

'மழை' : போர்ச்சூழலில் வாழ்க்கை என்பது பொதுவாக தொடரும் துரதிர்ஷடம் என்றால், பெண்ணுக்கு உடல்மீதான பலாத்காரம் என்கிற கூடின ஆபத்தையும் கொண்டிருக்கிறது. அவள் விரும்பும் தூவான மழை, அவள் மீதான வன்முறைக்கு காரணமாயிருக்கும் மேகம் என்பவற்றை அமைதி - அமைதி காக்கும் படை - அப்படை கட்டவிழ்த்துவிடும் வன்முறை என்று வாசிப்பு செய்ய முடியும்.
'தீ விளிம்பு ' ஒரு சிறுவனின் பார்வையில் மனிதர்கள் மர்மமான முறையில் காணமற்போவதை சொல்லும் கதை. கதையின் கடைசி வரி, பெற்றோரிடம் சொல்லமுடியாத காதலனின் மறைவு என்கிற தளத்தோடு நின்றுவிடுகிறது. போர்ச்சூழல் அற்ற சூழலில்கூட காதலனின் மறைவைப்பற்றி பெற்றோரிடம் பகிர இயலாதுதான் என்பது இதற்கான காரணமாய் இருக்கலாம்.
'ரங்கனும் ரஞ்சித் பெரேரோவும்' : கதை சொல்லலில் அதிக செயற்கைத்தனத்தைக் கொண்டிருக்கும் கதை இது. இது நிஜ சம்பவமாகவே இருக்கும் பட்சத்தில் 'வெளியில் வாழ்தலி ' ல் சாதித்த வெற்றி, 'மழை' யில் சாதித்த தனித்தன்மை, இதில் தட்டையாகவே வெளிப்பட்டிருக்கிறது.
'துளிர்ப்பு ' : கடைசிப் பாராவில் கருத்தை சொல்வதை எடுத்துவிட்டு, அக்கருத்தை உணர்த்த முயன்றிருக்கலாம்.
மேலே உள்ள கதைகள் அனைத்தும் "ஏன் இந்த துயரம்?" என்கிற கேள்வியை எழுப்புகின்றன. இதற்கான பதிலை இக்கதைகளிலிருந்தோ வாசகனின் அனுபவத்திலிருந்தோ பெறமுடியாது. பதில் அரசியல் தளத்தில் உள்ளது.
ஆனால், 'வெடிக்காய்' , 'வெளியில் வாழ்தல்' இரண்டும் போர்ச்சூழலை ஒரு பின்னணியாக வைத்துக்கொண்டு, மனித செயல்பாடுகளை, அவற்றின் விளைவுகளை சுட்டுகின்றன.

'வெடிக்காய்' இன்று தொலைந்துபோன, இயற்கையுடன் இயைந்த ஒரு காலத்திய சிறுவர்களின் வாழ்வின் சித்திரத்தை, சூழல்பற்றிய சிறு சிறு தீற்றல்களுடன் எழுப்புகிறது. இன்றைய போராளி ஒருவனை, வயதுக்கு மீறிய பேச்சுடன் சிறுவனாய் அறிமுகப்படுத்துகிறது. தொட்டாற்சிணுங்கி வெளிநாட்டிற்கு சென்றுவிடுவதாகவும், போராளி எதிர்ப்புணர்வுடன் போராடுவதாகவும், பார்வையாளானான 'இவன்', தன் இளமைக்காலச் சுவடுகளைத் தேடிப் போனபோது, தனது நிகழ்காலப்பாதை முற்றிலும் தடம் மாறிப்போவதாகவும் ஒரு வாசிப்பு செய்யும்போது, இக்கதை போர்ச்சூழலுக்குள்ளும் ஒரு சமூகவியல் விவாதத்தைகிளப்ப முடியும். வன்மம் கொள்ள காத்திருக்கும் நெருஞ்சி, பெயர்தெரியாத காட்டுச்செடி, மூக்குத்தி பூண்டுகள் என்று இயற்கையும் பலவிதமாய் சுட்டப்படுகிறது.
'வெளியில் வாழ்தல் ' : போர்ச்சூழலில் தந்தையையும் தாயையும் வெவ்வேறு காரணங்களால் பிரிந்துவிட்ட ஒரு சிறுவன் - தனது நிலைப்பற்றி, தனது சுற்றுப்புற மனிதர்கள் பற்றி, சக விளையாட்டுக் கூட்டாளிகள் பற்றி அவனது வயதின் புரிதல்கள் வழி, கதை நகர்த்தப்பட்டு, அம்மா-அப்பாவின் பிரிவுக்கான காரணங்கள் பின்னணியில் வைக்கப்பட்டு, அவனது ஏக்கம் கலந்த நம்பிக்கையை முடிவாய் சொல்வதன்வழி, வாசகனில் மிகுந்த பாதிப்பைச் செலுத்தும் கதை இது. இது ஏன் ஒரு நல்ல கதை ? ஒரு சிறுவனின் அனுபவ உலகம் அவனது வயதின் புரிதல்சார்ந்து இங்கே பதிவாகியிருக்கிறது. அந்த அனுபவ உலகிற்குள் நாம் பிரவேசிக்க பிரவேசிக்க, அச்சிறுவன் உணராத இழப்புகள் சார்ந்த சோகம் நம்மீது படர்கிறது. கதையின் தொடக்கம், சிக்கல், தீர்வு போன்ற மரபான விஷயங்கள் இந்த அனுபவ விவரிப்பினூடே சிறுவனின் கிரகிக்கக்கூடிய - கிரகிக்கமுடியாத எல்லையில் மெலிதாக படரவிடப்பட்டு, பிசிறுதட்டாத வகையில் கதை நகர்த்தப்படுகிறது.
ஈழத்து பேச்சுமொழியை அதன் ஏற்ற இறக்கங்களுடன் கேட்டு பழகியவர்களுக்கு (எனக்கு பிரசாந்தன்மூலம்) , இக்கதையின் மொழி ஒரு சங்கீதம். (பிரசாந்தன் இக்கதையைச் சொல்வதாக கற்பனையை ஓடவிட்டு, இக்கதையைப் படித்தபொழுது, சிறுவனது உலகிற்குள் முழுவதுமாக பிரவேசித்துவிட்டதான அனுபவம் ஏற்பட்டது.)

'விடுபடலி 'ல் வௌவால்கள் இயல்பான தொங்குதலினின்றும் கலைக்கப்பட்டுச் சிதறும் தருணமும் இவள் தனக்குப்பிடித்த இளையராஜா பாடல்கள் கேட்க கிடைக்கும், காலதாமதமாகி வரும், ஒரு குறிப்பிட்ட பஸ்ஸ¤க்கு காத்திருக்கும் தருணமும் ஒன்றாக இருப்பதாக அமைவது, இவளுக்கும் கணவனுக்கும் இடையில் இயல்பான மிதப்பில் இருக்கும் தாம்பத்யம் கலைய ஆரம்பிக்கும் புள்ளியாக சுட்டபடலாம்.
'பெண்' : ஆபிஸ் போகும் பெண் கணவனிடத்தில் தோழிகளிடத்தில் சக பயணிகளிடத்தில் காணமுடியாத அபிமானத்தை கண்டு வெம்பி, தனிமையை தீவிரமாக உணர்ந்து, பிறகு அது பொதுவான நிலை என்பதை உணர்ந்து சுயபச்சாதாபத்திலிருந்து விலகும் புள்ளியை நோக்கி நகர்கிறாள்.
பொதுவாக, பிற நாட்டு தமிழர்களிடம் காணக்கிடைக்காத ஒரு சாத்வீக அன்பை, முன்பின் அறிமுகமில்லாத மனித உறவுகளில் காணமுடிகிறது ( எகா- "ஓமப்பு..', 'போகாதையெடாப்பா'', 'நாதன் அண்ணை' போன்ற இதமான சக சுவாசங்கள்) 'இதுகளோடை சரிக்குச் சமனா வாதாட எனக்குக்கிட்ட வயதில்லை, ஒரு அண்ணனையோ, அக்காவையோ பெறாமல் போனீங்களேயம்மா..' என்பது போன்று, ஒரு ஈழத்து மகள் மட்டுமே தன் தாயிடம் பேசக்கூடும்.

தாட்சாயினியின் படைப்புலகம்

தொகுப்பின் பெரும்பாலான கதைகள் கேள்விப்பட்ட , கேள்விப்படாத போர்ச்சூழலின் துன்பத்தைச் சொல்லுகின்றன. போர்ச்சூழலின் ஊடாகக்கூட, மனிதமனத்தின் உள் நிகழும் போர்க்களம் பற்றி பேசும் கதைகள் கிடையாது. போர்ச்சூழலின் துன்பத்தைச் சொல்லும் ஒரு கட்டுரையோ ஒரு விவரணப்படமோ(documentary) வாசகனின் / பார்வை யாளனின் மனிதாபிமான உணர்வு, பொது பிரக்ஞை ஆகியவற்றில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், எந்த சூழலிலும் அங்கு உள்ள சிறுகதைகளைக் காண அதற்கான பார்வைக்கோணம் தேவை.

துயரத்தை பற்றிய பதிவு சிறுகதையாகுமா ?துயரம் பற்றிய தொடர் விவரிப்புகள் வாசகனில் ஒரு கட்டத்திற்குமேல், மரத்துபோகும் உணர்வையே(anesthetised) ஏற்படுத்தும். இத்துயரம் பற்றி ஏதும் செய்யமுடியாத கையறு நிலையில், வாசகனின் எதிர்வினை மௌனம்தான். ஆனால், சிறுகதையின் நோக்கம் வாசகனில் மௌனத்தைத் தோற்றுவிப்பதல்ல.


சிறுகதை என்பது வாழ்வினுடனான மனித மனம் கொள்ளும் உராய்வினால் ஏற்படும் ஒரு கீற்று வெளிச்சம் பற்றிய பதிவு. அந்த கீற்று வெளிச்சத்தில் தெரியும் ஒரு புதிய நிஜம்தான் சிறுகதையை சாத்தியமாக்குகிறது. வாழ்க்கையும் சரி, மனித மனமும் சரி, அனுபவத்தால், வாழ்விடத்தால் , காலத்தால் மாறுபட்டிருக்கின்றன. இந்த இரண்டின் வெவ்வேறு விகிதாச்சார அளவிலான உராய்வு, இதனுடன் கதையைச் சொல்பவனின் ஆளுமையும் சேரும்போது, கதையின் செய்தியிலும் உருவத்திலும் எண்ணிறந்த சாத்தியப்பாடுகள் உருவாகின்றன.

இந்த ஒரு கீற்று வெளிச்சத்தின் வெளிப்பாடுதான் நிஜம். கதை சொல்லல் என்பது (அடிப்படையில்) ஒரு பாவனைதான். [ஆனால், சிறுகதை எழுத ஆசைப்படும் பலர், இந்த பாவனைதான் எல்லாமும் என்று நம்புகின்றனர்; கதையை நன்கு வளைத்து, வளர்த்து, முடிவில் ஒரு நீதியை சொருகிவிட்டால் , "ஆச்சு, ஒரு சிறுகதை ரெடி! " ]

போர்ச்சூழலின் சிறுகதைகளாக 'வெடிக்காய்', 'வெளியில் வாழ்தல்' ஆகியவற்றை குறிப்பிடலாம். போர்ச்சூழல் தவிர்த்த கதைகளில் 'விடுபடல்' நல்ல கதை. பிற கதைகள் ஒரு வரி கருத்தில் உயிரைப் பிடித்துக்கொண்டிருப்பவை.

தமிழ் புனைகதை வரலாற்றில் கு.அழகிரிசாமி, பிரபஞ்சன் பெற்ற இடத்தை நோக்கி தாட்சாயணி நகரக்கூடும் என்பதைஇக்கதைகள் தெரிவிக்கின்றன.
இன்றைய காலத்தில் வெளிவரும் ஒரு நூலின் அட்டைப்படமும் அச்சும் அமைந்திருக்கும் விதம் பதிப்பாளரை 'குறைந்த செலவில் "எளிமையான" தொகுப்பு ' என்கிற பழைய-பொய்-மனோபாவக்காரராக காட்டுகிறது.

@ @ @ @

பிப்ரவரி மாத கூட்டம்

பிப்ரவரி மாதக்கூட்டத்தில் இலங்கைப் பெண் எழுத்தாளினியும், கவிதாயினியுமான தாட்சாயிணியின் 'ஒரு மரணமும் சில மனிதர்களும்'
விவாதிக்க எடுத்துக் கொள்ளப் பட்டு அங்மொ-கியோ வட்டார நூலகத்தில்
05-02-2006 மாலை 4:00 முதல் 6:00 வரை நிகழ்ந்து முடிந்தது.


ஏப்ரல் மாதக் கூட்டம் மற்றும் புத்தக விபரங்களை முடிவு செய்தவுடன், வலைப் பூவில் அறிவிக்கப் படும். வாசிப்பிற்கென புத்தகத்தை சிபாரிசு செய்ய விரும்பும் நண்பர்கள், vasagarvattam@yahoo.com.sg என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்கலாம், அல்லது பின்னூட்டத்திலும் தெரிவிக்கலாம். சிங்கை நூலகத்தில் கிடைக்கும் நூலாக இருந்தால், நிறைய நண்பர்கள் வாசிக்க வசதியாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்லுதல் நலம்.

ஜெயமோகனின் 'காடு'- மானஸாஜென்

ஜெயமோகனின் காடு ஒரு வாசிப்பு.
-மானஸாஜென்

எந்த ஒரு சிறந்த இலக்கியப் படைப்பும், சிக்கலாக்கிக் கொண்டு விடுபட வழிதெரியாது விழிக்கும் மனிதர்களின் வாழ்க்கையை குறித்தோ, சமூகத்தைக் குறித்தோ பேசுவதாகவும், மனித வாழ்வின் சிக்கல்களை ஒரு முழுமையான பார்வை கொண்டு தெளிவாக, புதிதாக, தற்சார்பில்லாமல் பார்க்கவும், அதன் அலைகளாய் எழும் உணர்வெழுற்சியோ, சிந்தனையின் கோணத்தில் மாற்றமோ, (paradigm shift), பெற்று புதிய விகாசத்தையும், தரிசனத்தையும் அடைய உதவுகிறது. இப்படியான தரிசனம், நீதி நெறி சொல்லும் போதனை தத்துவங்களாக புத்தியின் தளத்திலேயே நின்று விடாமல், ஆன்மாவின் சாரமாக இறங்குவதால் நிஜமான மாற்றம் சாத்தியமாகிறது. டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’- கதை வெறும் கதையாக நின்றுவிடாமல், அகிம்சைக்கான ஒரு தரிசனமாக காந்தியின் வாழ்வை மலரச் செய்ததை இச் சமயத்தில் நினைவு கூறலாம்.

நம் மனம் பழக்கப் பட்டதாய்த் தோன்றும், வார்த்தைகளையும், வடிவங்களை யும், ஒருவித இயந்திரத் தன்மையுடன் கையாள்கிறது, (இது ஒரு விதத்தில் உடலில் அனிச்சை செயலைப் போன்றது.) இதன் விளைவாக நம் சிந்தனை ஏற்கனவே அர்த்தங்கள் பழகியிருக்கும் வார்த்தைகளைக் கொண்டு ஏற்கனவே பழகிய சிந்தனையின் தடத்திலேயே பயணித்து, ஏற்கனவே நம் மனம் அறிந்திருக்கும் இடத்தையே அடைகிறது. படைப்பு முழுமையாக பார்க்கப் படாமல் வெ றும் வார்த்தைகளாய், நின்று விடும் அபாயம் இருப்பதினால், மறைத்துக் கூற ல், வடிவப் பரிசோதனை, புதிய வார்த்தைகளில் கூறல், உள்ளிட்ட பல்வேறு உத்திகளை படைப்பாளி கையாள நேர்கிறது. இவை நம்முடைய வாசிப்பு அனுபவத்தை கடினமாக்கி விட்டாலும், தவிர்க்கவியலாதது.

@ @ @ @
ஜெயமோகனின் காடு நாவல் தமிழ் இலக்கிய உலகில் ஒரு குறிப்பிடத்தகுந்த நாவல் என்பதற்குப் பின் வரு ம் காரணங்களைக் கூறலாம்.

1. நவீன வாழ்வு,- பெரு நகரங்கள், மற்றும் நகரங்களின் கேன்ஸர் கட்டிகளென உலகமெங்கும் மனிதர்களின் வாழ்வை சிக்கலாக்கி அலைகழிக்கிறது. சந்தைப் பொருளாதாரத்தில் வசதிகளும், வசதிகள் தரும் சாதனங்களும், மனித வாழ்வை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் திறன் கொண்டதென மனிதன் நம்ப வைக்கப் பட்டுள்ளான். இவற்றை வாங்கவும், தக்க வைத்துக் கொள்ளவும் பணம் அடிப்படைத் தேவையாகிப் போய்விடுகிறது. உறவுகளும்கூட பணத்தால் நிர்ணயம் செய்யப் படுகிறது. பொருளீட்டும் அலைச்சலில், அவசரம், இயந்திரத்தனமான வாழ்க்கை, சுயநலம், போட்டி, பொறாமை, சந்தேகம், பயம், நம்பிக்கையிழப்பு, போர், உறவுச் சிக்கல்கள், விவாகரத்து, தனிமை, என நோயுற்ற சமுதாயத்தின் கிடங்காக தேசங்களும், உலகமும் மாறிக்கொண்டு வருவது ஒரு முக்கியமான பிரச்சனை. இத் தன்மையான வாழ்க்கை முறை, மேற்கத்திய கொடை. இயற்கையோடு இசைந்த கீழைய சிந்தனைகளைக் கொண்ட மரபின் கூறுகளை, செழுமைப் படுத்தி வாழும் வாழ்க்கையை, மரபின் மூலமாக நவீன வாழ்வினை எதிர்கொள்ளும் சிந்தனை முறையினை ஜெயமோகன் இந்த நாவலிலும் முன்வைக்கிறார்.

2. காமம், உடலுறவு நம் தமிழ் சமூகத்தில் சங்க காலம் தொட்டு வெளிப்படையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருந்த நிலைமாறி இடையில் மூடி வைக்கப் பட்டும், அழுத்தப் பட்டும் ஒவ்வாத உணர்வாகவும் மாற்றப் பட்டதில், பாசாங்குகள் நிறைந்த சமூகமாக மாறி அழுகிக்கொண்டு இருக்கிறது. வன்முறையும், பாலுணர்வையும் அதீதமாய் தூண்டிப் பிழைக்கும் தமிழ் திரைப்படங்களே இதற்கான சாட்சிகள். காமத்தை வெளிப்படையாய் பேச முயன்றிருப்பது தேவையான ஒரு சிகிட்சை என்பதுவும் காரணம்.

3. நாவல் முழுவதும் சங்கப் பாடல்களை எடுத்து ஆண்டும், அவற்றை நம் வாழ்க்கையில் எப்படி தொடர்பு படுத்தி யோசிப்பது என்றும் குறிப்புகள் விட்டுச் சென்றிருக்கிறார். இலக்கியத்தின் அழகியலை ரசிப்பதும், அதை நம் வாழ்வில் பயன்படுத்துவதும் ஒரு கலை. நம் தமிழ் இலக்கியங்களை தினவாழ்வில் தொடர்பு படுத்தி யோசிப்பதும் முடிவெடுப்பதும், நம் வாழ்வை செழுமைப் படுத்தவும், மரபை நவீனப் படுத்தவும் என இரு விதங்களிலும் பயனளிப்பது.

4. வளி மண்டலத்தில் துளைகள், காற்று, நீர் மாசுபடுதல், ஆலை, எண்ணை, கதிரியக்கக் கழிவுகள், காடுகள் அழிப்பு என சமூகத்தின் இயந்திரத்தனமான பொறுப்பின்மைக்கு எதிராக இத்தகைய நாவல்கள் கவனிக்கப் படவேண்டிய தேவை இருக்கின்றது.
@ @ @ @
அலங்காரங்களை நீக்கிப் பார்த்தால் காடு, ஒரு எளிமையான முதற்காதலைச் சொல்லும் கதை. நிறைய படைப்பாளிகளால் பல முறை பயன்படுத்தப் பட்ட சாதாரண கரு. துர்கனேவ், செகாவ், தாஸ்தாவ்ஸ்கி, வா.வே. சு. அய்யர், பாரதி, கு.பா.ர., சுஜாதா, போன்ற மேதைகள் அவர்களின் மேதமையினால் இலக்கியப் படைப்பாக்கி இருக்கிறார்கள். எனவே கதையைக் காட்டிலும், கதை கையாளும், காமமும் பின்புலத்தில் குறியீடாக விரியும், காடும், வார்த்தைகளின் ஊடாக ஜெயமோகன் பிடிக்க முயலும் அருபமான விரிவும்தான் முக்கியமானவைகளாகின்றன.

காமம், மலின படைப்புகளில் வலிந்து திணிக்கப் பட்டதாகவும், தினவெடுத்த குறிகளை உரசிக் கொள்ள ஓயாது விழையும் மனநோய் கூறுள்ள சமூகத்திற்கு தீனிபோடவுமே உதவுகின்றன. கு.பா.ரா., தி.ஜா., கரிச்சான் குஞ்சு, பாலகுமாரன், ஜெயமோகன் போன்றோர்
காமத்தை கருவாக்கியதில் கவனிக்கத் தகுந்த படைப்பாளிகள்.

தி.ஜா வின் மோகமுள்ளில் பாபு காமத்தால் அலைகழிக்கப் பட்டவனாகவும், காமம் அவன் சக்திகளை சிதறடிக்கும் தடையாகவுமே இருக்க, ஜமுனா அவனுக்குள்ளிருக்கும் காமத்தை ஆக்கபூர்வமான சக்தியாக்குகிறாள்.

ஜெயமோகனின் கன்யாகுமரி காமத்தை அறிவின் தளத்தில் வைத்து அலசமுற்படுகிறது. காமமும், கூடலும் ஆணுக்கும், பெண்ணுக்குமான ஈகோ போராட்டமாகவும், ஒருவரை ஒருவர் ஆதிக்கம் கொள்ள விழையும் இடையறாத போராட்டத்திற்கான தந்திரோபயமாகவும், திருமணம் சார்ந்த உறவுகள் சடங்காகவும், நவீன வாழ்க்கை நிர்பந்திக்கும் மன உளைச்சல்களிலிருந்து தற்காலிகமாகவேணும் விடுபட விழையும் நம்பிக்கையாகவும் காட்சிப் படுகிறது. (அந் நம்பிக்கையும் ஓட்டைப் பாத்திரத்தில் நிரம்பிய நீராக ஈகோ போராட்டத்தில் கசிந்து போக நேர்வது துரதிர்ஷ்ட்டம்.)

காமம் கன்யாகுமரியின் நகர்புற சூழலில், அறிவுஜீவித்தனத்தோடு, வரண்டு வெறுமை கொள்ளும் சூழலாய் வெளிப்பட்டு அதன் இருண்ட முகம் காட்ட, காட்டில் காமம் பசுமையான மலைகளூம், மழையிலும் செழித்து மனிதர்களின் மகிழ்ச்சியாகவும், வாழ்வின் கொண்டாட்டமாகவும், அன்பின் ஊற்றாகவும் கவித்துவம் கொள்கிறது. அம்பிகா அக்காவின் அவயங்கள் கிரிதரனின் பால்யபருவத்தின் அறியாமையோடு கூடிய குறுகுறுப்புடன் அறிமுகமாகின்றன. பின்னாளில் குட்டப்பன், சினேகம்மை, இரட்டையர் மூலமாக உடல்பூர்வமான காமம் அறிமுகப் படுகிறது. இயற்கையோடு இயைந்த சூழலில் காமமும் கலவியும் உண்பது உறங்குவது போன்ற அத்யாவசிய தேவையாகவும், குற்ற உணர்வுகள் எதையும் கிளர்த்தாத செயல்பாடாகவும், ஆட்டத்தின் மகிழ்ச்சியையும் விளையாட்டையும் தவற விடாத செயலாகவும் ஆகிறது. ( மாறாக நகரின் பின்புலத்தில் அறிமுகமாகும் மாமியும், காட்டைச் சுரண்டி அழிக்கும் நகரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் எஞ்சினியர் மேனனின் மனைவியும் காமத்தின் இருண்ட மூலைகளில் கிரிதரனைப் பிணைத்து அவன் ஆன்மாவை குதறுகின்றனர்.)

எஞ்சினியர் வீட்டில் சரித்திரத்தில் தன்னொத்த இடம் என்பதாய் கொள்ளும் மிளாவின் கறியோடு, வன்புணர்ச்சியும் அவனது பாலைத் திணைக்கு அச்சாரமிடுகிறது. பிளவுபட்ட மனம் மனப்பிழற்வுக்கும் இழுத்துச் செல்கிறது.

அய்யர் அழகியல் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும், காமத்தை ரசிக்கும் நுண்மனவுலகை அறிமுகப் படுத்திவைக்கிறார். ஏற்கனவே தெரிந்த அகப்பாடல்களின் வரிகள் தன் வாழ்வில் அப்போது நீலியின் மூலமாக ஏறியிருக்கும், காதலுக்கு, மலைகளுக்கு, அருவிகளுக்கு, காட்டுக்கு ஒரு புதிய தரிசனத்தைத் தருகிறது. அத்தரிசனம், அவன் வாழ்வின் குறிஞ்சியில் துவங்கி, பாலைவரையிலும் அவனது வாழ்வை ஆழப்படுத்துகிறது. வாழ்வினை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் அய்யர் அவரது ரசனையின் கூர்மையால் வரிகளைக் கடந்த அத்வைத வெளிக்கு நகர்ந்து கொண்டிருக்கிறார். நீலியைக் கொண்டு சில உயரங்களை தொட்டிருக்கும் கிரிதரனுக்கு, அய்யரின் வீச்சு உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அய்யரும், கிரிதரனும் அடையும் பரிணாமமும் இன்னமும் செல்லக்கூடிய சாத்தியப் பாடுகளும் நமக்கு ஒன்றும் புதிதானதல்ல, சக்தி வழிபாடும், காஷ்மீர சைவமும், திபெத்திய பௌத்தமும் சென்றடையும் அதே இடம்தான். ஒரு நவீன மனம் அத்தகைய இடத்தை அடைவது மரபின் மூலம் நவீனத்தை எதிர்கொள்வதே!

மலையாளம் கலந்த வட்டார வழக்கும் நம் பொறுமையை சோதிக்கிறது. காடு பற்றிய அதீதமான விவரிப்பும் சில இடங்களில் சொற்களாகவே நின்று விடுகிறது.
காட்டைப் பார்க்காதவனுக்கு விவரிப்புகளினால் பயன் கிடையாது. காட்டைப் பார்த்தவனுக்கு இவை தேவை கிடையாது.
@ @ @ @ @

ஜெயமோகனின் 'காடு'- ரெ. பாண்டியன்


மனிதனில் மண்டிக்கிடக்கும் காமத்தைச் சொல்ல காடாய் மண்டும்
புனைவு:ஜெயமோகனின் "காடு"
ரெ.பாண்டியன் / நவம்பர் 05

1. களம் கிரிதரன் என்கிற இளைஞனின் காம உணர்வுகள் விழிப்படைவதையும், அதில் பங்கு வகிக்கும் சூழலையும், வழி தவறிப் பாய்ந்த காம உணர்வுகளின் காட்டாற்றில் தங்களது இருப்பின் அடையாளத்தை இழந்து போனவர்களையும் பற்றிய களம் "காடு".

கிரியின் காம விழிப்பிற்கு சூழலில் இருக்கக்கூடிய சகஜமான உரையாடல்கள், கிண்டல்கள், நுட்பமான குறிப்புணர்த்தல்கள் பின்னணியாக அமைகின்றன.

காமவிழிப்பில் ஆரம்பித்து, மாமியின் சேட்டைகளில் தடுமாறி, பெண் உடல் நிர்வாணம் பார்த்து, சுயபோகத்தில் ஆழ்ந்து, நீலியின்மீது காதலாகி நின்று , இறுதியில் முதல் உடல் உறவு அனுபவம் மேனத்தியுடன் ஏற்படுகிறது.

காட்டாற்றில் தடுமாறி காணமற் போனவர்களாக (ஆண் பெண் சரிசமமாக) :
அ) மாமாவின் காமம் - இளமை முதல் படுகொலை செய்யப்படுவதுவரை,
ஆ) மாமியின் கண்டன் புலையனுடனான காமம் கிரிமுதல் இளைஞனுடன் ஓடிப்போவது வரை,
இ) அனந்தலட்சுமியின் விதவை வாழ்வின் காமம்
ஈ) நாணம்மை, ஸ்தாணு அய்யர் போன்றோரின் கற்பனையில் காம பயணம்(voyeurism)
உ) ஈழவ ஆசாரியின் காமம் படுகொலை வரைஊ) ஷாடனனின் காமம் தம்பியால் கொல்லப்படுவதுவரை
எ) சாவில் விடுதலை பெற, பொழுதுபோக்கி காத்திருக்கும் சிவகுமாரன் அண்ணாச்சியின் மனைவியின் காமம்.

காமத்தை அனுபவித்து கடந்தவர்களாக:
அ) பருவம்தோறுமான காதலிகளை கடந்துவரும் போத்தி
ஆ) காமம் கடந்து, அய்யரின் 'மிஷின் வேலை செய்யாத' காதல் /காமம்
இ) காமத்தை அனுபவித்து, பைபிள் காட்டை கடக்கும் குரிசுஈ) காட்டு வாழ்வில் குட்டப்பனின் வேலிகளற்ற காமம்.

காமத்தின் எதிர்திசையில் இருப்பவர்களாக:
வாழ்வின் இன்பத்தை இயல்பாக துய்க்காத, பஸ்ஸில் வேலைக்குப் போகும்போதும் சதா ஜெபம் செய்யும் மகள்-மருமகள்ஆகியோரின் கவனிப்பு கிடைக்காத சோகத்தை பரமசிவ பெருமாள் கம்பனின் சோகவரிகளில்தான் மூழ்கடிக்கிறார். துக்கத்தை மறக்க கம்பராமயணக் காட்டில் அலைகிறார். ஊர், காடு என்று இரு களங்கள் நாவலின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் மாறி மாறி இடம்பெறுகின்றன.

2. கதையமைப்பும் நடையும் :
2.1) நடு வாழ்வில் காணமற்போகும் காதலின் துயரத்தை கதை சொல்லலின் முத்தாய்ப்பாக வைத்து, வாழ்வு கலைத்துப் போடப்பட்டு அழுத்தமான ஞாபகப்பதிவுகளாக கதைசொல்லல் நடைபெறுகிறது. முதுமையில் தனது பழைய சுவட்டை தேட ஆரம்பித்து, இளமைக்காலம் சொல்லப்பட்டு, நீலியுடன் காதலாகி நிற்கும் தருணத்தில், இரண்டு குழந்தைகளின் குடும்ப மனிதனாக இருப்பதைச்சொல்லி, அம்மாவின் பேச்சைத்தட்ட விரும்பாது வேணியை திருமணம் செய்துகொள்வது முதல் முகச்சுழிப்பு இறுதிவரை மாறாது நாகர்கோயில் மருத்துவமனையில் வேணி இறந்துபோகும்வரைக்கும் சொல்லப்பட்டு, மாமாவின் படுகொலையும் நீலியின் மரணமும் கதையின் முடிவில் சொல்லப்படுகிறது.
கதை அமைப்பை இவ்வாறு சொல்லலாம் :1) இளமை வாழ்வும் காம விழிப்பும் (காத்திருத்தல் - முல்லைத் திணை -மாலை (night) )2) காட்டுடனும் நீலியுடனுமான காதல் (கூடல் - குறிஞ்சித் திணை -நள்ளிரவு )3) காட்டின் 'விலகு' என்ற சொல், காட்டுநீலியோ என்கிற சந்தேகம் (ஊடல் - மருதத் திணை -வைகறை )4) நீலியின் மரணமும், மாமா, குட்டப்பன் ஆகியோரின் பிரிவும் (பிரிவு - பாலைத் திணை - நண்பகல்)5) நிராதரவாகிப்போன பிற்பகுதி வாழ்வும் நீலியின் ஞாபகங்களும் (இரங்கல் -நெய்தல் திணை-ஏற்படுபொழுது (evening) )

ஆனால் கதைசொல்லல்முறை : 5->1->2->5->2->3->5->2->4.

வேணி அம்மாவிடம் கிடைக்காத அன்பை கிரியிடம் ஒருதலைபட்சமாக வைப்பது கைக்கிளை திணை; மாமி, மாமா மற்றும் பலரது பொருந்தாக் காமம் பெருந்திணை.

காமவிழிப்பை செழுமைப்படுத்துபவர்களாக போத்தியும் நாணம்மையும் வருகிறார்கள். காட்டுடனான மோகத்தையும் நீலியுனான காதலையும் செழுமைப்படுத்துபவர்களாக குட்டப்பனும் அய்யரும் வருகிறார்கள்.

2.2) நடைகாட்டினுடனான அனுபவத்தையும் காதல் வயப்பட்ட ஆனந்தத்தையும் மேன்மையானமொழியில் சொல்ல, ஆசிரியரின் சொந்தக்கவிதைகளைக் காட்டிலும் கபிலரும் குறுந்தொகையும் துணைவருகிறார்கள். பிற்கால வாழ்வின் துயரத்தைச் சொல்ல கம்பனின் வரிகள் தேவையாயிருக்கின்றன. நவீன இலக்கிய வரிசையில் சங்க இலக்கிய வரிகளின்மீது இவ்வளவு ஆதர்சத்தை தெரிவிக்கும் நாவல் "காடு" தான்.

3. நாவலின் தரிசனம் :
3.1) கிரி காட்டின் மீதும் மலையணுத்தியின்மீதும் காதல்கொள்கிறான். காதலின் தீவிரம் எதன்மீது அதிகம் என்கிற மனப்போராட்டம் கூட அவனுக்கு எழுகிறது. ஆனால், இறுதியில், இரண்டிடமும் கிரியினால் தன்னை முழுதாக இழக்கமுடியவில்லை. அவன் தன்னை இழந்திருந்தால், குட்டப்பனாகவோ மலையனாகவோ அவன் மாறியிருக்கவேண்டும். அல்லது அய்யரைப்போல மௌனம் கவிந்து, சங்கீதம் மற்றும் இலக்கிய சஞ்சாரத்தை விடுத்து, காட்டின் சஞ்சாரத்தில் ஈடுபட்டிருக்கவேண்டும்.

மலையணுத்தி காட்டின்நீலியின் மறு உருவோ என்கிற குழப்பமும், தான் அமர்ந்திருக்கும் அயனி மரத்தின் உயிர்ப் படைகளைக்கூட தான் சரிவர காணப்போவதில்லை என்கிற அதைரியமும் ( அல்லது நேர்மையும்) அவனைப் பின் வாங்க வைக்கின்றன.

காட்டு குத்தகைவேலையும் கிரிக்கு ஒத்துவரவில்லை. பெட்டிக்கடைதான் சரி வருகிறது. பெரிய கனவுகளும் கவிதை ரசனைகளுமாக வளர்ந்தவன். ஆனால், காட்டின் பேரனுபவம் பற்றி கிலியடைந்து, பின்வாங்க நேரிடுகிறது. அவனால் மாமாவைப்போல பிறரை ஏய்த்துப் பிழைக்கமுடியாது. ஆனால், அம்மாவின் ஏய்ப்புக்குத் துணைபோய், வேணியை திருமணம் செய்துகொள்ளமுடியும். பத்து வயது வரையிலும், கிரியை இடுப்பில் சுமந்த அம்மாதான், மாமாவின் சொத்தை அனுபவிக்க பாதைப் போட்டுத் தருகிறாள். அப்பாவுக்கு நிகழ்காலம் ஒரு பொருட்டில்லை. அவரது வாரிசுதான் கிரி.

இதற்குமாறாக, அய்யர் காமத்தைத் தாண்டி, கலாரசனை தாண்டி, காட்டின் பேரனுபவத்தை நோக்கி நகர்ந்து "யாரிடமும் பகிர முடியாத யாளின் வாய் உருளையாக" மௌனமாகிறார்.

குட்டப்பனுக்கு ரசனைகள் கிடையாது. அவன் காட்டின், உடம்பின் மனிதன். உச்சிப்பாறைகள் "படச்ச தம்புரானுக்க களி" என்று நம்புபவன். விரும்பியபடி "ஆனை சவிட்டிக்கொன்னு" மோட்சம் கிடைக்கிறது. அவனது வக்கீல் மகன் அப்பாவின் ஆளுமையை அறிந்தவனில்லை.

மாமா காமத்தை மட்டும் கண்டவர். காட்டை ஏய்ப்பதற்கு பயன்படுத்தியவர்.
கயிற்றை துப்பவும் முடியாது கழிக்கவும் முடியாது சிக்கிக்கொண்ட மிளாவைப்போல குரிசு காட்டிற்குள் பைபிளோடு மல்லுக்கட்டுகிறார். பிறகு, ரெஜினாளுக்கு இரண்டு குழந்தைகளை தந்தபிறகுதான், அவர் பைபிளை கண்டடைகிறார்.

3.2) வாசிப்பில் மிகவும் நெருக்கத்தை உணர்வது குட்டப்பனிடமும் போத்தியிடமும்தான். அய்யர் கொஞ்சம் அதிகமாகவே சஞ்சரிக்கிறார். ஆனால், இசைத்தட்டு ஏன் கறுப்பு நிறம் தெரியுமா என்று கேட்டுவிட்டு அவர் சொல்லும் பதில் நிஜமான தேடல் சார்ந்ததுதான். நமக்கு இந்த மாதிரி குட்டப்பன் கிடைத்தால், காட்டைப்பற்றி எவ்வளவு அனுபவங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஆனால், அதற்கு, ஒரு "ஏமானா"க பிறந்திருக்கவேண்டும், இல்லையென்றால், அவனிடம் ஒரு "சவமா"கத்தான் மிஞ்ச நேரிடும்.

3.3) அம்பிகா அக்கா தனியாக குறிப்பிடவேண்டிய ஒரு பாத்திரம். தனது மார்புகளை புளிமாங்காயாக காணும் அசட்டு குழந்தை-தம்பியின் அக்கா, நீலியைச் சந்தித்துவிட்டு காட்டிலிருந்து திரும்பும் தம்பியின் புதிய கம்பீரத்தை வியக்கும் அக்கா,மனதில் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக நடமாடும் தம்பியை 'சொத்துக்குத்தானே' என்றும் 'நம்பி வந்தவளை அழவிடாதே' என்றும் கண்டிக்கும் அக்கா. கிரியின் நனவுலக லட்சியங்களுக்கு ஆசவாசம் அவள்; அவனது கனவுலக அலட்சியங்களுக்கு அவள் ஒரு துன்புறுத்தும் மனசாட்சி.

3.4) காட்டினால் வசீகரிக்கப்பட்டவர்கள் கிரிதரனும் அய்யரும். அய்யர் காட்டினால் உள்ளிழுத்துக் கொள்ளப்படுகிறார். கிரிதரன் காட்டினுள் சென்றுவிட்டு வெளியேறிவிட்டவன். ஆனால், பிரக்ஞையில் சதா காட்டையும் நீலியையும் சுமந்து திரிபவன். இருவரையும் மனநோயாளிகளென சமூகம் கருதினாலும், அவர்கள் காட்டின்-காய்ச்சல் கண்டவர்கள் என்று அறிந்தவன் காட்டை அறிந்த குட்டப்பன் மட்டுமே.

மேற்கத்தியவர்களின் வாழ்வு பொதுவாக புறவாழ்வு சாகசத்தின் துடிப்பு நிறைந்தது. உதாரணமாக, ஹெமிங்வேயின்"கடலும் கிழவனும்" நாவலில் கிழவனின் கடலில் மீன்பிடிக்க சென்ற அனுபவத்தின் மெய்ம்மையைச் சொல்லும் கதை. நம்மவர்களின் புறவாழ்வு சாகசத்தின் மெய்ம்மையைச் சொல்லும் பதிவுகளோ புனைவுகளோ குறைவு. அந்த வகையில், "காடு" முக்கியமான ஒரு முயற்சி என்றாலும், அது குட்டப்பனின் தேடலைச் சொல்ல முயன்றிருந்தால், அது தமிழுக்கு புது வரவாகியிருந்திருக்கும். ஆனால், கிரியோ அய்யரோ நம்மை அதிக தூரம் பயணப்பட வைப்பதில்லை.

4) வேதசகாயகுமார் சொல்லும் "எல்லையற்ற விரிவை" நோக்கி நாவலின் யத்தனங்கள் :

4.1) காமம் மனிதனை வாழ்வுமுழுக்க அலைகழிக்கும் ஆதாரமான விஷயங்களில் ஒன்று. ஆனால், இதனைப்பற்றி சமுகத்தில் நிலவிவரும் மௌனத்தையும் அதற்கு எதிராக சதா பேசிக்கொண்டிருக்கும் போத்தியின் வழியும், நாணம்மை வழியும், குட்டப்பன் வழியும் அய்யர் வழியும் ஏராளமானோரின் கதைகள் செவிவழிசெய்தியாகின்றன. இச்செய்திகளைச் சொல்லும்பொழுது, குட்டப்பனும் நாணம்மையும் போத்தியும் அய்யரும் அறிவுபூர்வமாக இல்லாது, அனுபவபூர்வமாக (வேதசகாயகுமாரின் வார்த்தைகளில் "உணர்வுபூர்வமாக") முன்வைக்கும் வாழ்க்கைப்பற்றிய பார்வைகள் அல்லது விவாதங்கள் வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவை. வெவ்வேறு திசைகளில் சஞ்சரிப்பவை அல்லது நகர்பவை. புது அனுபவத்திற்கான திறந்த முடிவுகளை கொண்டிருப்பவை.
எ-கா : அலகுக்காரி நாணம்மை(புழக்கடை வம்பளப்பில் ஈடுபடும் வம்சபாடகி, சரித்திர ஆசிரியை) சொல்லும் "வித்து குணம் பத்து குணமாக்கும்" ; போத்தி சொல்லும் " வளக்குழியிலே பத்துநிமிஷம் காலை பூந்த வச்சிட்டு நிப்பியா?திளைச்சுக்கிட்டே கிடக்குமிடே. உள்ள தீயாக்கும்.."

4.2) கூடலையும் கூடல்நிமித்தத்தைப்பற்றியும் குறுந்தொகை வரிகளிலிருந்தும் அதன்பின்னான துக்கத்தை கம்பனின் வரிகளிலிருந்தும் சொல்வதன்மூலம் காலந்தோறுமான காமம் பற்றிய பார்வையின் மரபோடு நாவல் தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறது.

4.3) மோசமான மனிதர்களிடம்கூட தங்கள் நல்லதனத்தை(goodness) தொடும்கணங்கள் வந்துபோகின்றன: மாமா மனம்விட்டு கிரியிடம் பேசுவது, அப்பா அம்மாவின் விஷம் வைக்கும் செயல்களுக்கு மன்னிப்பு கோருமிடம், சிவக்குமாரன் அண்ணாச்சி தன் மகன் தனக்காக மொட்டைபோட்டு நீர்த்தலையுடன் தன்சிதைக்கு தீமூட்டவேண்டும் என்பதுவும், திருமூலர் தன்னைப்பார்த்து கிண்டலாக சிரிப்பதுபற்றி சொல்வதும்.

4.4) நாவலில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் தங்களைச்சுற்றி புனைவை விரித்தவண்ணம் இருக்கின்றன. ஆனால், இந்த அத்தனை புனைவுகளும் நாவலின் மையச்சரடான காமத்தின் ஊடாட்டத்தினை ஆதார சுருதியாக கொண்டிருக்கின்றன.
@ @ @ @

வாசகர் வட்டத்தின் நவம்பர் மாத கூட்டம்

வாசகர் வட்டத்தின் நவம்பர் மாதக் கூட்டம், 27 -11-2005 அன்று, அங்மொ-கியோ வட்டார நூலகத்தில் மாலை 4:00 மணியிலிருந்து, 06:00 வரை நடை பெற்றது. முன்னரே தீர்மானிக்கப் பட்ட புத்தகமான ஜெயமோகனின் 'காடு' நாவலை வாசித்து அனுபவமாக்கி பகிர்ந்து கொண்டனர், பார்வைகளின் மீதான விவாதமும் நடந்தேறியது.

வாசகர் வட்டம் ஓர் அறிமுகம்!

நண்பர்களே! சிங்கப்பூரில் 'வாசகர் வட்டம்' என்ற அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. அதன் செயல்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளவும், பதிவு செய்யவும், இன்னமும் பரவலான நண்பர்களை அடையவும் வேண்டி இந்த வலைப்பூவைத் தொடங்கியிருக்கிறோம். உங்களின் பங்களிப்பு இந்த காரியத்தை இன்னமும் சிறப்பாக்கும் என்று நம்புகிறோம்.


'வாசகர் வட்டம்' என்ன செய்ய முயல்கிறது? தமிழகத்திலும், வேறு எங்கு கவனித்தாலும், ஒத்த சிந்தனையுடைய படைப்பாளிகள், ஒன்றாகப் பேசி, எழுதி, பிடித்த-பிடிக்காத, படித்த-பயனுள்ள விஷயங்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலமாக சிறப்பாக வளர்ந்துள்ளதைக் கவனிக்கலாம். (உதாரணங்கள் வேண்டுமா? டில்லியில் ஒன்றாகச் சேர்ந்த சுஜாதா-கஸ்தூரிரங்கன் -இந்திரா பார்த்தசாரதி, சுரா- கிருஷ்ணன் நம்பி, வண்ணதாசன்-வண்ணந்¢லவன்-விக்கிரமாதித்யன், பாலகுமாரன்-மாலன்- தி.சா.ராஜு, கி.ராஜநாராயணன் - கு.அழகிரிசாமி, சுகுமாரன் -ஆத்மாநாம்- விமலாதித்த மாமல்லன், நா-முத்துசாமி-சா.கந்தசாமி-சி.மணி- ஞானக்கூத்தன் -நகுலன், சி.சு. செல்லப்பா-கா.நா.சு-பிரமிள், கல்கி-சிதம்பரநாத முதலியார்-ராஜாஜி-சின்ன அண்ணாமலை-மா.பொ.சி, ஜெயகாந்தன் -விந்தன், புதுமைப்பித்தன்-சிதம்பர ரகுநாதன், நா.பிச்சமூர்த்தி-கு.பா.ரா, அமைப்புகளான மணிக்கொடி, எழுத்து, கசடதபற, கணையாழி இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்! )


நட்ப்பார்ந்த சூழலில் இலக்கிய வாசிப்பு, விமர்சனக் கூட்டங்கள் நடத்துவதன் மூலமும், நல்ல இலக்கியங்களைக் குறித்த ஆரோகியமான விவாதங்களின் மூலமும், நல்ல இலக்கியங்களை புரிந்து கொள்ளுதல் குறிப்பாக சமகால நவீன இலக்கியங்கள் மீதான மேம்போக்கான, தவறான புரிதல்களைக் களைதல்! தனித் தன்மையுடன் கூடிய சிங்கை இலக்கியத்தை உலகின் தரமான இலக்கியவரிசையில் அமரச் செய்தல்.


நல்ல இலக்கியங்களை சிங்கப்பூரின் இளைஞர்களுக்கு கொண்டு சேர்ப்பது, படைப்பார்வம் உள்ளவர்களை ஊக்கப்படுத்துவது, தமிழிலக்கியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது.



@ @ @

நீங்கள் எந்த விதத்தில் பங்களிக்கக் கூடும். இரண்டுமாதத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு நூல் மீது சிங்கப்பூர் நூலகம் எதிலேனும் விவாதம் நடக்கும், நீங்கள் சிங்கப்பூரிலிருந்தால் அந்தப் புத்தகம் குறித்த உங்களின் வாசிப்பை கூட்டத்தில் முன் வைக்கலாம், அல்லது அவற்றை கட்டுரையாக்கி vasagarvattam@yahoo.com.sg என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவற்றை 'வாசகர் வட்டம்' என்ற வலைப்பூவில் இடுவோம். ஒரே நூலைக் குறித்த பல்வேறு வாசிப்பு அனுபவங்கள், வாசகன் அந்நூலை ஆழமாகப் புரிந்து கொள்ளவும், அவனது வாசிப்புத் திறனுக்கு உரைகல்லாகவும், இருக்கும் என நம்புகிறோம்.

இது தவிரவும் தமிழிலக்கியத்தைப் புரிந்து கொள்ளத் துணை செய்யும், நல்ல இலக்கியங்கள் என நீங்கள் நம்பும், ஆரம்ப எழுத்தாளனுக்கு உதவக் கூடும் என நீங்கள் நினைக்கும் எதையும் பகிர்ந்து கொள்ளலாம். இலக்கிய வம்புகள், கிசுசிசுகள், அக்க போர்களைத் தவிர்ப்பது நலம்.

@ @ @

வாருங்கள் நண்பர்களே! நற்றமிழுக்கு நல்லதொரு வாசலைத் திறப்போம்!

வாசகர் வட்டம் சார்பாக
என்றென்றும் அன்புடன்,

மானஸாஜென்.
08-02-2006