வண்ணதாசனின் அன்புப் பிரபஞ்சத்தில் சில பிரளய மழைத்துளிகள்

வண்ணதாசனின் அன்புப் பிரபஞ்சத்தில் சில பிரளய மழைத்துளிகள்

சித்ரா

‘அன்பு’ இந்த வார்த்தை வள்ளுவர் காலத்திலிருந்து கையாளப்பட்டு வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அதில் அன்பாக இருத்தல் என்ற நிலையை விட அன்பு இல்லாத வாழ்க்கை எப்படி வறட்சியடைந்து கிடக்கிறது என்று சொல்லப்பட்டவையே அதிகம் என்று தோன்றுகிறது. அன்பகத்தான் இல்லாதான் உயிர் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? வன்முறைதான் மனிதனின் இயல்பா? ஏனைய மிருகங்களிலிருந்து உயர்ந்த பரிணாம வளர்ச்சி பெற்ற உயர்நிலை மிருகமாய் வாழ்வதுதான் மனிதனின் தனி அடையாளமா? சுற்றிலும் நாம் பார்க்கும் மிருகங்கள் ஒன்று கூட திட்டமிட்டு கொலை செய்வதில்லை. கையில் கத்தியுடன் அலையவில்லை. முதுகில் அரிவாளுடன் காத்திருக்கவில்லை. கைத்துப்பாக்கி ஏவுகணை ஒன்றைக்கூட கண்டு பிடித்து அதை மற்ற மிருகங்களுக்கு விற்று வாழவில்லை. தன்னை துன்புறுத்தினால் தற்காத்துக் கொள்ள மட்டும் மகாத்மா காந்தி சொன்ன ஆயுதங்களான கூரிய பற்கள், நகங்கள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்கின்றன. பசி என்ற தேவைக்கு மட்டுமே வேட்டையாடுகின்றன. புலிக்குப் பசி எடுக்காத போது மான்குட்டி கூட பக்கத்தில் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். வேட்டையை விளையாட்டாகப் பழகியது மனிதன் மட்டும் தான்.
மனித வேட்டையாடும் போது மட்டும் ஆயுதங்களோடு கூடுதலாக சூழ்ச்சி, நயவஞ்சகம் போன்ற அறிவுத்திறன் கொண்ட புதிய ஆயுதங்களையும் சேர்த்துக் கொள்கிறான். { கொஞ்சம் கொட்டாவி வருகிறதா? இதுக்குத்தான் மத்தியான நேரங்களில் மெகாத் தொடர்களையும் திரைப்படங்களையும் பார்க்கக் கூடாது என்பது!!!] சரி முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.வாசல் கதவு தட்டப்படுகிறது. யார் என்று மாயக்கண் மூலம் பார்க்கும் போது கையில்அரிவாளோடு உன்னைக் கொல்ல வந்திருக்கிறேன் என்று சொன்னால் வராத ஆச்சரியம் வாசலில் நின்று கொண்டு உங்களிடம் அன்பாகப் இருக்கப்போகிறேன் என்று நமக்குத் தெரிந்தவர்கள் சொன்னால் ஏற்படும் திடுக்கிடல்!! எதற்காகத் தேவையில்லாமல் நம்மிடம் பிரியம் காட்ட வேண்டும் கடன் கேட்கப் போகிறார்களோ? ‘கடன் அன்பை முறிக்கும்’ என்று சொல்லிவிடலாமா என்ற வாசகத்தைக் கதவில் தொங்க விடலாமா என்று ஒரு கண நேரத்தில் எக்கச்சக்க எண்ணங்கள்! வம்பு வளர்க்கவும், பிறர் மனம் வாட வீண் கதைகள் பேசுவதும் ஆயுதங்கள் கொண்டு துன்புறுத்துவதும் மனிதனின் இயல்பான குணங்களாக யாரும் சொல்லித்தராமல் வருகிறது. பிறரிடம் நேசத்தைக் காட்டத்தான் சொல்லித்தர வேண்டியிருக்கிறது. நீதி நூல்கள் எழுதப்பட நேரிடுகிறது. சட்டம், ஒழுங்கு, தண்டனை என்று பயமுறுத்தி அவனை நெறிப்படுத்த வேண்டியிருக்கிறது.

பிறரிடம் கனிவாகப் பேசுவது, பிரியத்துடன் பழகுவது என்பதெல்லாம் ஒரு கைதேர்ந்த விற்பனையாளன் தன் பொருட்களை விற்பதற்காக வாடிக்கையாளரிடம் காரண காரியங்களோடு காட்டும் அன்பைப் போல் ஒரு செயற்கையான விஷயமாகிவிட்டது. ஒரு விற்பனை முடிந்ததும் டக்கென்று மாறும் முகபாவம் நீ யாரோ நான் யாரோ என்று அடுத்த வாடிக்கையாளரை பிடிக்க்ப் போகும் அவசரங்களோடு யந்திரத்தனமான மனிதர்கள் மத்தியில் அன்பு அதிலும் எதையும் எதிர்பார்க்காத அன்பு என்பதே காணக்கிடைக்காதப் பொருளாகி விட்ட ஒரு காலக்கட்டத்தில் அன்பிலே தோய்ந்து அன்பிலே வாழ்ந்து அன்புக்காக உருகும் மனிதர்களைப் பற்றியக் கதைகள். (இப்படி பரீட்சைக்குப் படிப்பது போல் இப்படி வண்ணதாசன் கதைகளை அதுவும் அந்த சற்றே பெரிதான சிறுகதைத் தொகுப்பைப் படித்ததன் வம்புதான் இது.) இந்த மாதிரி பெரியப் புத்தகங்களை அதுவும் நமக்கு விருப்பமான எழுத்துக்கள் ஒட்டுமொத்தமாகக் கிடைப்பது ஒருபக்கம் சந்தோஷம் என்றாலும் இதைக் கையாள்வதில் இருக்கும் சிரமங்கள் என்னைப்போல் படிப்பாளிகளுக்கு மட்டும் தான் புரியும். பெரியப் புத்தகங்களைக் கையில் எடுத்தாலே கனக்கிறது தூக்கம் வருகிறது என்ற காரணத்தினாலேயே வகுப்பில் கூடிய மட்டும் தூங்காமல் கோழிக்கிறுக்கலாக நோட்ஸ் எடுத்து அதையே பல்கலைக் கழக பரீட்சை வரைக்கும் படித்து, வகுப்பில் தூங்காமல் நோட்ஸ் எடுக்கும் காரணத்தினால் அவ்வப்போது சந்தேகம் கேட்டு நல்ல விஷயம் தெரிந்த ஆசிரியரை குழப்பி ஆராய்ச்சி படிப்பு வரை நீ போனால் இந்தக் கேள்விக்குப் பதில் தெரியும் என்று வாழ்த்தி வீரவணக்கம் செய்து விடுவார். இந்தப் பெரிய புத்தகத்தைக் கூட இரண்டாகவோ மூன்றாகவோ பைண்ட் செய்தால் நன்றாக இருக்கும் என்று புத்தகம் வாங்கும் போதே திலீப்குமாரிடம் சொல்லி அவர் என்னை அற்பப் பதர் மாதிரி பார்த்தார். என்னைப் போல் யாராவது ஒரு சக படிப்பாளி இதைப் பற்றி யோசித்திருக்க மாட்டாரா அட நம்ம நெனச்சதையே இவங்களும் சொல்றாங்களே என்று சொல்லமாட்டர்களா என்று ஒரு நப்பாசைதான்!

மிச்சம்:

உடலை விற்கும் பெண்ணின் அந்தரங்கம், அழகுணர்ச்சி, எதிர்காலத்தைப் பற்றியப் பயம், தனிமை, வறுமை சாதாரணமாகச் சிரித்துக் கொண்டே கேட்கும் விசாரிப்பில் அன்புத்துளிகளை உணர்தல் என்று பனி குளிர்வது மாதிரி சில சமயம் சந்தோஷமும் குளிர்கிறது.“சுருக்கா டீயை வாங்கியாந்தா என்ன? பனியில் நிண்ணா ரெண்டு பேருக்கும் ஒடம்புஎன்னத்துக்கு ஆகும்?”, என்ற சாதாரணக் கேள்வி அவளுக்கு தரும் ஆறுதல்ஒரு கண நேரத்துக்குத்தான் என்றாலும் அந்த எளிய மக்கள் ஒருவர் செய்யும் தொழில் மற்றவர் அறிந்தாலும் அதையும் தாண்டி ஏண்டா எல்லோரும் வச்சிக் குடிச்ச மிச்சத்தைக் குடிக்கறே என்ற கேள்வியின் மூலம் எச்சிலாகிப் போன தன் வாழ்க்கையைப்பற்றிய வெறுப்புகளை உமிழ்கிறாள். உணருகிறாள்.

தனுமை:

இந்தக் கதையைப் பற்றி அநேகமாக எல்லோரும் எழுதியிருக்கக் கூடும். வண்ணதாசனுக்கேக் கூட மிகவும் பிடித்தக் கதையாக இருக்கலாம். இந்த மௌனமே காதலாகிற நேரம் அதுவும் காமம் கலக்காதக் காதல் எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரு கற்பனைச் சுகம். தினமும் சந்திக்கும் இல்லை அடிக்கடி சந்திக்கும் யாரோ ஒருத்திக்காக மனதில் ஒரு சிம்மாசனம் போட்டு அதில் அவளை மகாராணியாக்கும் கற்பனை அநேகமாக நிறைய ஆண்களுக்கு இருக்கும். முக்கியமாக அவளுக்காக காத்திருப்பதும் அவளை நினைத்து ஏங்குவதும் அவளுக்கு அது தெரியாமலே வாழ்க்கை ஓடிவிடுவதுமாக ஒரு புரட்டப்பபடாதப் பக்கமாக பேசப்படாத சொல்லாக எழுதப்பாடாதப் பாடலாக எல்லோர் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கலாம். ஞானப்பனுக்கு டெய்ஸி வாத்திச்சியின் வளப்பமான உடலைப் பார்த்து சராசரி ஆண்மகனாய் அவன் உடல் அலைகிறது. தனலெட்சுமி தன்னுடைய பலகீனமான காலுடன் உடைமரக்காடுகளின் மத்தியில் மணலில் நடக்கும் போது படும் கஷ்டம் இனி அவளுக்குக் கிடையாது. பஸ் காலனி வரை போக ஆரம்பித்து விட்டது என்பதிலிருந்து தனுவின் நினைவு அவனுள் மெழுகைப் போல் உருகி உருகி உறைந்து அவள் உதிர்த்த நீலப்பூ ஞானப்பன் புத்தகங்களுக்கு மத்தியில் பழுப்புத்தடமாகி இருக்கிறது. டெய்ஸியின் அணைப்பு அவன் அந்தரங்க எதிர்ப்பார்ப்பை மீறி எதிர்க்கவே செய்கிறது. தனலெட்சுமிதான் வேணுமாக்கும் என்று அவள் செய்கின்ற நையாண்டி இன்னும் அவள் மீது வெறுப்பை அதிகப்படுத்துவதாகவே இருக்கிறது. வெறும் பார்வை மட்டுமெ இந்த நேசத்தில் சொல்லப்படிருக்கிறது. தினசரி நடந்து செல்லும் பாதையில் இப்படி ஒரு சலனம் உருவானதை தனு உணராமலேயே அவள் வாழ்க்கை முடிவடைந்திருக்கும்.

வரும் போகும்

சுந்தரம் எல்லோரிடத்திலும் அன்பாக இருப்பது மட்டும் போதவில்லை. கொஞ்சம் போலி வார்த்தைகள், கெட்டிக்காரத்தனம், அதிகாரம், கொஞ்சல், கெஞ்சல் இப்படி ஏதாவது ஒன்றுடன் கலந்து காட்ட வேண்டியிருக்கிறது. வெறும் அன்பு சலிப்புத் தட்டி விடுகிறது. தன்னுடைய பதினாறாவது வயதில் எந்தக் கவலையும் இல்லாமல் சினிமா பார்க்க முடிந்தது. கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க முடிந்தது. அம்மாவிடம் கோபித்துக் கொண்டு தட்டை வீசி எறிய முடிந்தது. புத்தகம் வாங்கிப் படிக்க முடிந்தது. வாலிபால் வாங்கி விளையாட முடிந்தது. படிப்பு முடிந்ததும் வேலையைப் பற்றிய எந்த யோசனையும் இல்லாமல் வாழ முடிந்தது. இப்படி அனுபவித்த இளமையின் சுகம் தன்னைத் தேடி வந்த வந்த பையனின் ‘இளமையில் வறுமை’யின் மூலம் உறுத்துகிறது. அவனுக்கு தன்னால் உதவ முடியாது என்ற கையாலாகத்தனத்தை விட அவனுக்கு ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும் என்று குருட்டு யோசனை பிடித்திருக்கிறது. நண்பன் கிட்டுவின் காதல் தோல்வி தற்கொலை முயற்சியிலும் தோல்வியில் முடிகிறது. ஆட்டுரலுடன் கட்டப்பட்ட பிச்சம்மா, அவள் காட்டும் பிரியம், அந்த வீட்டின் உழைப்பும் வறுமையும் சினிமா தியேட்டர் வாசலில் எண்ணெய் சூட்டில் வேகும் மொத்தக் குடும்பம், ஆனால் அதில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் உறவின் நெருக்கம் வசதி வந்தால் இப்படி சார்ந்து வாழும் நிர்ப்பந்தங்கள் இல்லாத வாழ்க்கையில் ஒரு விலகல் வந்து விடுகிறது. இப்படி பூவடுக்குகள் போல் எக்கச்சக்க மனிதர்கள் வருகிறார்கள். புலம்பலாய் தொடங்கும் கதை புன்னகையில் முடிகிறது. கதைக்குள் எக்கச்சக்கக் கதைகள் வரும் போகும்.

புளிப்புக்கனிகள்

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்பதைப்போல் தான் விரும்பியப் பெண் அதுவும் அழகான பெண் தன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொண்டாள் என்றவுடன் “ நா எதுக்கு வருத்தப்படணும்? தெருவோட மானம் நாறிப் போகாம இவ்வளவோட போச்சேண்ணு சந்தோஷம்லா படணும்? எந்தச்சவம் இருந்தா என்ன? எந்தச்சவம் போனா என்ன? இதுவா மனுஷனுக்குக் கவலை?”, என்ற கேள்வியில் தெரியும் கயமைத்தனம் அவன் உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கிறான் என்பது புரிந்ததும் பரிதாபத்துக்குரியவனாகிறான். அவள் அழகு காஞ்சனா போலயிருக்கிறாள் என்று ரசித்தது, அவள் கவனத்தை ஈர்க்க உரத்தக் குரலில் பேசி வம்பு செய்தது, எதற்கும் படியாத அந்தக் காதல் கடைசியில் கீழ்த்தரமாய் அது சீவல் பார்ட்டிதானாம் அவள் தம்பியை வைத்து சரி செய்து விடலாம் என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொள்ளும் சராசரிக்கும் கீழானவன் இப்படிப்பட்டவர்களிடம் தன்னைக் கற்புக்கரசி என்று நிரூபித்துக்கொள்ள எதற்காக பெண்கள் பாடுபட வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்

ஆண்கள் எத்தனை பேர் கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியில் செல்வார்கள்?இல்லை என்னால் தனியாக சமாளிக்க முடியும் என்று குழந்தையுடன் மாமியார் வீட்டுக்குப் போய்அம்மா வரலியா என்ற இடைவிடாக் கேள்விகளில் மனம் சுருங்கி பஸ்ஸில் வீடு திரும்புகிறான். பெரிதாக அழத்தொடங்கும் குழந்தையைச் சமாளிக்க வகை தெரியாது தவிக்கையில் முன்பின் அறிமுகமில்லாதவர்களெல்லாம் செய்யும் உதவி. அம்மாவை இழந்து தவிக்கும் பிள்ளையும் தானும் அனாதரவாக இப்படிப்பட்டப் பயணம் மேற்கொள்ள நேரிடுவதாய் ஒரு கணம் மனம் தன் கற்பனையை பறக்க விடுகிறது. பார்ப்பதற்கு முரட்டுத்த்னமாக தோற்றமளிக்கும் எட்டையா. அந்த முதிர்ந்த மனிதரின் கனிவான மொழியில் குழந்தை சமாதானமாகி தூங்கி விடுகிறாள். அவர் பேசும் அந்தக் குழந்தை மொழியில் அவருக்கு அந்த சிறு பெண் அன்னையாகி சோறு பொங்கி அவருக்கு ஊட்டி இத்தனையும் செய்து கடைசியில் தூங்கி விடுகிறாள். குழந்தைக்கு அவர் சொல்லும் வார்த்தை விளங்கியிருக்க . முடியாது. ஆனால் அந்த அன்பின் மொழி மட்டும் புரிந்திருக்கும். குழந்தையுடன் இறங்கும் போது பாத்துய்யா பாத்து என்று மிருதுவாய் தோளைத் தொடும் தோழமை. இதெல்லாம் எங்கோ ஒரு உலகத்தில் நடக்கலாம், நடந்து கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் இந்த நவீன வாழ்க்கை முறையில் தோன்றாமல் இல்லை. எம் ஆர் டி ரயிலில் பேருந்தில் லேசாகக் குழந்தை சிணுங்க ஆரம்பித்ததும் அதை சமாதானப்படுத்த இருந்த இடத்திலிருந்தே வாயில் பிளாஸ்டிக் சமாதானப்படுத்தியைச் சொருகும் பெற்றோர்கள், லேசான அழுகுரலுக்கே முகம் சுளிக்கும் புதுயுக மனிதர்கள், குழந்தைக்குத் தெரிந்த மொழியில் அது தன் தேவையைச் சிரித்தோ அழுதோ தெரியப் படுத்துகிறது என்பதைப் புத்தகத்தில் மட்டுமே படிக்கத் தெரிந்தவர்கள். குழந்தை நம்மைப்பார்த்து சிரித்து விட்டால் பதிலுக்கு சிரிக்க தயக்கம் காட்டும் நாகரிகம். சிரித்தது பெரிய தவறு போல் தலையை அமுக்கி வலுக்கட்டாயமாக ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை காட்டும் அம்மாக்கள்.அறிமுகமில்லாதவர்கள் உன்னைப் பார்த்து சிரிக்கவோ தொடவோ அனுமதிக்காதே என்று வக்கிரங்களுக்கு வடிகால் தேடும் ஒரு சில மிருகங்களுக்காக வலுக்கட்டாயமாக தேவையில்லாதவற்றை மூளையில் திணித்து குழந்தைகளிடமிருந்து பறிக்கப்படும் குழந்தைப் பருவம்.இவற்றையெல்லாம் தினமும் சந்தித்துக் கொண்டிருக்கும் நமக்கு வேறு எதோ உலகத்தில் இவையெல்லாம் நடந்திருக்கக் கூடும் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

மிதிபட:

பெண்கள் நடுத்தர வர்க்கம், அடிமட்டத்து பெண்கள், முறை தவறியவர்கள் யாராக இருந்தாலும் மனதின் அடியாழத்தில் வலியுடன் வாழ்க்கையை நேசிக்கிறார்கள். கூடவே ஆணகளையும் நேசிக்கிறார்கள். தனித்தன்மையுடன் ஒளிர்கிறார்கள். ஆனால் ஆண்களால் இழிவுப் படுத்தப் படுகிறார்கள். அடிஉதைகளை தாங்குகிறார்கள். அதே வன்மத்துடன் பதிலுக்கு வேறுவிதமாக தாக்குகிறார்கள். மனதளவில் ஒட்டாமல் வாழும் புருஷனுடன் கோபித்துக்கொண்டு பிறந்த வீடு போய் இருந்து விட்டு திரும்பும் மனைவி. திரும்பி வரும் போது வீட்டின் அலங்கோலத்தைக் கண்டு முகம் சுளிக்கிறாள். அவள் முகம் சுளிப்பதைப் பார்த்து கயமைத்தனத்தோடு கொச்சையாகப் பேசி மனதால் துன்புறுத்திக் கொண்டெயிருக்கும் கணவன், மின்சாரம் போகும் கணநேர இருட்டில் அவள் உடலை மட்டும் சொந்தம் கொண்டாட வரும் கணவனை உதறித்தள்ளி விட்டுக் கிளம்புகிறாள், குனிந்து பையை எடுக்கும் போது தன்னை இடுப்பில் உதைப்பானோ என்ற பயத்துடனே! பெண்கள் தனக்குக் கீழானவர்கள். அவளை உடலால் மனதால் எப்படி வேண்டுமானாலும்துன்புறுத்தலாம். உடல் சேர்க்கைக்கூட அவளை அவமதிப்பதற்கும் துன்புறுத்துவதற்குமான ஒரு ஆயுதம். தேவைப்பட்டால் அவளை தெய்வநிலைக்கு உயர்த்திக்கொள்ளவும் தேவையில்லை என்றால் தூக்கி எறியவும் தயங்காது இதை சாதாரண விஷயமாக அதில் ஒன்றும் தவறில்லை என்று நினைத்த காலகட்டத்திலிருந்து விலகி வெகுதூரம் வந்து விட்டதாக சில சமயம் தோன்றினாலும் எங்கே வெகுதூரம் ஒதோ இங்கே பக்கத்தில் தான் இருக்கிறது என்று அவ்வப்போது ஒரு தோற்றம் பூதமாய் நம் கண் முன் நிற்கிறது.

கலைக்க முடியாத ஒப்பனைகள்

பாப்பாவுக்கும் கல்யாண மாப்பிள்ளைக்கும் இருந்த உடல் நெருக்கம் கடைசி வரை கதாநாயகனுக்கு உறுத்தலாகவேயிருக்கிறது. த்ன்னுடன் நெருக்கமாக இருந்தவன் கல்யாணத்திற்கு வந்து சகஜமாகப் பழகுவதும் பேசுவதும் தன்னிடமும் தேவையற்ற நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயல்வதை விரும்பாத ஆண்மனம். மீண்டும் மீண்டும் பாப்பாவையும் கல்யாணப்பெண்ணையும் ஒப்பிட்டு எப்படி தன் நண்பன் இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதித்தான் என்பதை யோசிக்கிறான். நண்பனின் கல்யாணத்திற்கு ஒரு நாள் விடுப்பில் அவசரம் அவசரமாக வந்து கல்யாணத்தையும் முழுமையாகப் பார்க்க முடியாமல், தினந்தோறும் செய்யும் அதே வேலையையே இங்கும் வந்து மொய் எழுதும் வேலையைச் செய்கிறான். இதை கிட்டத்தட்ட சொந்த அனுபவம் போல் தொகுத்திருக்கிறார் நண்பனின் திருமணத்தில் கலந்து கொண்டோம் என்ற சந்தோஷம் இல்லாமல் எரிச்சலோடு கிளம்புகிறான்.


பொதுவாகவே இவர் கதைகளில் பெரிய லட்சியவாதிகள், ஒழுக்கசீலர்கள் இப்படியெல்லாம் கிடையாது. சாதாரண மனிதர்கள். ஆனால் நுண்ணியமான எண்ணங்களில் சிறு செயல்பாடுகளில் அசாதாரணமானவர்கள் ஆகிறார்கள். வண்ணதாசன் இவரை அறிந்தவர்கள் இவர் பல கதைகளில் பல்வேறு வடிவங்களில் புன்னகைப்பதுப் புரியும்.

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு