உமா மகேஸ்வரியின் 'வெறும் பொழுது' குறித்து மானஸாஜென்

உமா மகேஸ்வரியின் 'வெறும் பொழுது.'
மானஸாஜென்.


'மீசைக்கார மியாகண்ணு' சாம்பல் அடுக்குகளின் ஊடாக நினைவுக்கு வந்தார், உமா மகேஸ்வரியின் 'வெறும் பொழுது' வாசிக்கையில்...மியாகண்ணு ஒரு அல்பப் பூச்சி. ஒரு சின்ன பருப்பு டப்பாதான் அதன் உலகம். வெறும் பூச்சி மட்டுமல்ல வாழ்தலுக்கான பிரபஞ்ச ரகசியத்தை உள்ளடக்கிய உயிரியாகப்படுகிறது கவிஞர் சமயவேலுக்கும் அவரை வாசித்ததன் ஊடாக நமக்கும்.


உமா மகேஸ்வரியின் உலகம் மிகச் சிறியது...ஒரு வீடுகூட அல்ல ஒரு கட்டிலும், சிறு சமையலறையுமே, ஆனால் ஜன்னல் இருக்கிறது, ஜன்னல் சில செடிகளையும், ஆகாயத்தையும், மழையையும் காட்டுவதன் மூலம் வேலிகளையும், பறத்தலைக் குறித்த பிரக்ஞையையும் ஒரு சேரக்காட்டுகிறது.


கவிமனம் உருவாக்கும் கூர்மிகுந்த பிரக்ஞை, மிகுந்த வலி தோய்ந்த பாதையாக வாழ்வினை மாற்றும் வல்லமை கொள்கிறது. இந்த வலியிலிருந்து விடுபட வேலிகளை உடைக்க முயலும் காரியத்தை உமா மகேஸ்வரி செய்ய முற்படுவதில்லை. மாறாக எல்லாவற்றின் ஊடாக எல்லாவற்றையும் பார்ப்பதன் மூலமாக... வேலிகளும், சுவர்களும், வானமும் ஒரே பொருளாளானதாக பார்க்க முயல்வதன் மூலமாக அவருக்கான விடுதலையை அவர் அடைய முயல்கிறார்.


இத்தகைய பார்வை அவர் கவிதைகளில் பூத்தொடுத்தல், விளக்கேற்றுதல், பாத்திரங்களைச் சுத்தம் செய்தல், குப்பை கொட்டுதல், மழையில் வேடிக்கை போன்ற தின வாழ்வின் செயல்களில் ஒரு ஆழத்தையும், அந்தரங்கமான தனிமையின் மோனத்தையும் ஏற்றி வானத்தின் அமைதியையும், பறவையின் சுதந்திரத்தையும், பூத்தலின் புத்துணர்ச்சியையும் உருவாக்க முயல்கின்றன.

அகண்டத்தையும், அகாலத்திற்குமான இயற்கை இவருக்குப் பிடிபடுவது வித்யாசமான கோணத்தில், சிறகுகள்- விசிறிமடிப்புப் பாவாடை நலுங்காது கொசுவியமர்ந்த சிறுமியாய்ப் படுகிறது. நதியின் அலை அம்மாவின் புடவையாய் படுகிறது. கடலின் நுனியலைகள் முதுமையை நினைவுபடுத்துகிறது. தூறல், குளித்த கூந்தலை உலுக்குவதையும்,


இந்த 'மனமே நூலாகும் நுண்மை' (பூத்தொடுத்தல்) எல்லா கவிதைகளிலும் வாய்த்திருக்கிறதா? "இல்லை!" என்றுதான் சலிப்புற நேர்க்கிறது நம் பதில். இதற்கு காரணங்களாக தென்பட்டவை காலம் காலமாய் கவிஞர்கள் உபயோகித்து கழிவுக் குப்பைகளாகி விட்ட சொற்களைக் கொண்டு கவிதைகள் கட்டமைக்கப்படுவது. வார்த்தைகளின் நவீனத்தன்மை வாசகனின் கவனத்தைக் குவிப்பதன் மூலமாக புதுப் பொருளை வாசிப்புக்குத்தருகிறது. புழங்கிச் சலித்த வார்த்தைகள் மூளையின் குப்பைக்கூடைக்குள் போய் சேர்ந்து பழைய அர்த்தத்தையே தருவதன் மூலம், இயல்பாகவே அனிச்சையாக அதன் மேலோட்டமான நிலையையே படிமங்களும், குறியீடுகளும், உருவகங்களும் எய்துகின்றன. (உதாரணமாக: வெளுத்திருக்கும் மனத்திரைக்குள், உதிர்கின்ற நடைபாதைப் பூக்கள்,சன்னலுக்குள் கைதியாக, மன இடுக்கில், ஞாபகத்தழும்பில், பருவத்தின் வானவில், உறிஞ்சுகிற விழிகள்..)


கிளைகள்=சுதந்திரம், வானம்= விசாலம், பறத்தல்=சுதந்திரம், கட்டில், கருச்சிதைவு=ஆணாதிக்கம், மழலை, நட்சத்திரங்கள், மழை, பூக்கள்=புத்துணர்ச்சி, ஒளி=சத்தியம், குறுங்கத்தி=வன்மம், மலர்/இலை/சிறகு உதிர்தல்=மரணம் இப்படியாக வழக்கமான படிமங்களும், குறியீடுகளும் கூட ஒரு நல்ல கவிதை வேண்டும் விசேசமான அர்த்ததை தருவதற்குப் பதிலாக கவிதைகளைக் கீழிறக்கவே செய்கின்றன.


சிலகவிதைகள் நேரடியாக ஆரம்பித்து, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட முடிவில் முற்றுப் பெறுகின்றன. பேசும் பொருளும், தொனியும் வேறாக இருந்தாலும், இவைகள் பிரச்சாரத்தொனி கொண்ட கவிதைகள் போன்ற ஒன்றுதான். அதன் கருத்தைத் தவிர்த்து வாசகனுக்குக் கிடைப்பது ஏதுமில்லை.

நேசம் பேசும் கவிதைகள் உமாமகேஸ்வரியின் பலம். தன் சின்னஞ்சிறு உலகத்தை பாவனையின்றி நேர்மையாக பதிவு செய்தல் பலம். கவிதைகளுக்கான மொழியும், உத்திகளும், பலஹீனங்கள்.

@ @ @
http://www.vasagarvattam.blogspot.com

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு