மா. இளங்கண்ணனின்,‘பரிதியைக் கண்ட பனி’
சுப்பிரமணியன் ரமேஷ்
மனித வாழ்க்கையே அலைகடலில் அகப்பட்ட துரும்புதான். அதிலும் அவன் ஏழையாய் இருந்து விட்டால் அந்த ஏழைபடும் பாட்டை இலக்கியத்தில் சொல்லி மாளாது.
மா.இளங்கண்ணன் அவர்களின் ‘ பரிதியைக் கண்ட பனி’ இப்படியான ஒரு ஏழையின் உணர்ச்சிக் கொந்தளிப்பினை ஒரு புகைப்படம் போலக் காட்டுகிறது. அண்ணாமலையின் நெஞ்சம் விம்ம, மனம் கனன்று கொண்டிருக்கும் சூழலில் ஆரம்பிக்கும் கதை, உணர்ச்சிப் பெருக்கின் மறு எல்லை தொட்டு அவர் களிப்பு கொள்ளுகையில் முடிவடைகிறது. உணர்ச்சி நிலையில் தாளமாற்றமோ, அல்லது கதை முன்னகர்ந்து விரிவடைவதையோ ஆசிரியர் கருத்தாக கொள்ளாமல், மனித வாழ்வின் உணர்ச்சிச் சுழிப்பினை உணர்த்துவதில் குறியாய் இருக்கிறார்.
குப்பை அள்ளும் அண்ணாமலை குடும்பத்தையும், தன் மகன் திருமேனியையும் கரைசேர்க்க தன்னால் முடிந்த மட்டிலும் பாடு படுகிறார். பகுதி நேர வேலையாக அம்பலவாணர் வீட்டுத் தோட்டவேலைகளையும் செய்து மகனை வளர்க்கிறார். அம்பலவாணர் உதவி புரிய மகனின் மனதறிந்து அவனை மேலும் படிக்க வைத்து பட்டதாரியாக்க கனவு காண்கிறார். அடித்தட்டிலிருக்கும் தன் வம்சம், படித்த தன் பிள்ளையால் முன்னுக்கு வந்து விடும் என்ற அவரது ஆசையில் மண் விழுகிறது. பொறுப்பில்லாமல் யாரோ நாலாவது மாடியில் வைத்திருக்கும் பூந்தொட்டி தன் மகனின் தலையில் விழுந்து அவன் மண்டையை உடைப்பதன் மூலமாக . . . அலைபாய ஆரம்பிக்கும் அவரது மனம் மகன் ஆபரேஷன் முடிந்து கண்திறப்பானோ என்ற ஆவலாதியில் உணர்ச்சிக் கொந்தளிப்பாய் அவரைப் பந்தாடுகிறது, அவரது மகன் திருமேனி கண்திறந்து அவரைப் பார்க்கும் பார்வையில் சூரியனைக் கண்ட பனிபோல அவரின் துன்பமெல்லாம் பறந்தோடி விடுகிறது, என கதை முடிகிறது.
சிறு கதைக்கேற்ற கால அளவு கச்சிதமாகப் பொருந்திய கதை. கதை நிகழும் காலத்தில் அப்போதைய சமூகச் சித்திரங்களைப் பதிவு செய்த படியும் சென்றிருக்கிறது. ஓட்டைக்குப்பைத் தொட்டியிலிருந்து நீர் ஒழுக குப்பை அள்ளப்படும் காட்சி, மாடியிலே கல்லுரலில் இடிக்கும் சூழல், பணியாளர்களின் மனமறிந்து உதவிடும் முதலாளிகள், பொறுப்பில்லாமல், மாடிப்படிச் சுவரில் பூந்தொட்டிகளை வைத்து வளர்க்கும் சூழல் இப்படி.
ஆசிரியர் உணர்ச்சிப் பெருக்கினை முற்றிலுமாக உடலின் மோழியாக உரைப்பதன் மூலமாக உள்ளத்து நிலையை நயமாகக் காட்டுகிறார். ‘உள்ளம் வெந்து கொண்டிருப்பதனால் அண்ணாமலைக்கு வாய் அடைத்து விடுகிறது.’ ‘ மூச்சு விடக்கூட நேரமில்லை’ ‘இரத்த வேர்வை சிந்துகிறார்.’ ‘ பசி வயிற்றைக்கிள்ளுகிறது.’ ‘கண்களில் அருவி கொட்டுகிறது வாயில் துவாலை வைத்துக் கடித்துக் கொண்டு அழுகிறார்’ ‘ உணர்ச்சி வசப் பட்டதால் அவர் உடல் புல்லரிக்கிறது. கண்களில் இன்பக் கண்ணீர் மல்கி கன்னங்களில் உருண்டு உதட்டில் பட்டு இனிக்கிறது, உள்ளம் வேகிறது, நெஞ்சினில் தீயை அள்ளிக் கொட்டுகிறாள், நெஞ்சினில் அடித்துக் கொண்டு குருதிக் கண்ணீர் கொட்டுகிறாள், அண்ணாமலை நெஞ்சத்தைக் கசக்கிப் பிழிகிறது, நெஞ்சில் ஆயிரமாயிரம் ஈட்டிகள் பாய்கின்றன, நெஞ்சம் உருகுகின்றது, தளும்பி நிற்க்கும் கண்ணீரில் தத்தளிக்கும் சிவந்த விழிகள், வாய் வரவில்லை, நா எழவில்லை, புறங்கையைக் கட்டிக் கொண்டு, துக்கத்தை மென்று விழுங்குகிறார், நீண்ட பேருமூச்சு வெளியேறுகிறது. அவர் உள்ளத்தைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த பளு பறக்கிறது பன்னீர் சிந்துகிறது. உதடுகளில் புன்னகை மின்ன, கரு விழிகளில் இன்பக் கண்ணீர் மல்குகிறது. இப்படி உணர்வுகளின் மொழியை ஆசிரியர் உடல் அசைவுகளாக விவரிப்பதன் மூலமாக குறிப்புணர்த்துகிறார்.
@ @ @

Labels:

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு