இலட்சிய வாதமும் நம்பகத்தன்மையும்
இராம கண்ணபிரான் 12-11-06

(1)
பிரிட்டிஷ் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தர முயன்ற அரசியல் தீரர்கள் பலர். அவர்களுள் வெற்றிக்கனியைக் கொய்தவர் சத்தியாகிரகர் காந்தியடிகள். அவர் வாழ்ந்த யுகத்தில், பிரம்மச்சரியம் பூண்டு நாதுச் விடுதலை வேள்விக்குத் தங்கள் இளம் வாழ்வை அர்ப்பணித்த பாரத தேசத்து யுவதிகளும், வாலிபர்களும்எண்ணிக்கையில் பலராவர். தேசத்துக்கு உழைத்த இவர்களின் தியாக உள்ளங்கள் இந்திய படைப்பாக்கங்களில் பதிவாகியுள்ளன. இப்படைப்புகளில் இர்லட்சியவாத விழுமங்களே மேலோங்கியுள்ளன.
இன்னொரு நிலையில், அடிமை இந்தியாவைப் பிரிட்டஷரிடமிருந்து மீட்க இராணுவப் பலத்தை நம்பியவர் சுபாஷ் சந்திர போஸ். ஜப்பானியர் சிங்கப்பூரை ஆண்ட போது அவர்களின் உதவியோடு இந்தியாவை வெள்ளையர்களிடமிருந்து விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கையில், இப்பகுதியில் இந்திய தேசிய இராணுவத்தை அவர் நிறுவினார். அவ்வேளையில் ‘சுதந்திர இந்தியா’ ‘யுவ பாரதம்’ போன்ற தினசரி, வார பத்திரிகைகள் சிங்கப்பூரில் தோன்றி, சுதத்திரத்தை கருப் பொருளாகக் கொண்டு இலட்சிய தாகத்துடன் கதை, கட்டுரை, கவிதை முதலியவற்றை வெளியிட்டன. இந்த ஆக்கங்களில் இலட்சியவாத கோஷங்கள் மிகுந்து காணப்பட்டன.

கடந்த நூற்றாண்டின் அறுபதுகளின் முற்பகுதியில் போர்னியோவின் ஒரு பகுதியை இள்ளடக்கி மலேசியா உருவான போது, இந்தோனேசியாவின் அன்றைய அதிபர் சுகர்னோ அத்திட்டத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க மலேசியாவில் அப்போது இணையவிருந்த சிங்கப்பூரின் சில இடங்களில் குண்டு வெடிப்புகளை நிகழச் செய்தார். மலேசியா தேசயத்திற்கு ஆதரவு தரும் வகையில் , இலட்சிய நோக்கில் ‘அழகோவியம்’ என்னும் ஒரு குறுங்காவியத்தை இயற்றி அதை ஒரு நூலாக வெளியிட்டார் சிங்கப்பூர் கவிஞர் முருகடியான். கருவுற்றிருக்கும் தம் இளம் மனைவி வெண்ணிலவைச் சிங்கையில் விட்டுவிட்டு, அவள் கணவன்வேலவன் மலேசிய-இந்தோனிசிய எல்லைப் போரில் ஈடுபட்டு சில காலம் கழித்ஹ்து வெற்றியுடன் நாடு திரும்புவதாக அவர் கூறுகிறார். இக்காவியத்தில் இலட்சியவாதப் போர்ப் பரணி பாடப்ப்டுகிறது.
இப்படியாக சென்ற நூற்றாண்டின் இலட்சியவாதப் படைப்புகளில் உயரிய விழுமங்களும், பிரசாரக கோஷங்களும், காவியப் பண்பு கொண்ட பரணி வாசகங்களும் மிகுந்து இருக்கின்றன.

ஆனால், இந்நூற்றாண்டின் படைப்புகளோ நவீன இலக்கியத் தளத்தில் இயங்குவனவாக மாறுதல் பெற்றுள்ளன. எனவே இலட்சியவாத ஆக்கங்கள் முன் போல் உணர்வுமிக்க கனவுகளுடன் பூமிக்கு மேலே பாவாமல், நடைமுறை வாழ்க்கையைச் சித்தரித்துத் தரையில் நடக்க வேண்டியிருக்கிறது. தரிசிக்கப்படும் வாழ்க்கையை ஓரளவிற்கு உள்ளது உள்ளபடியே சொல்லி, நம்பகத்தன்மையுடன் எழுதுவது தற்போதைய இலட்சியவாதப் படைப்புகளின் போக்காக மாறியுள்ளது.

ஆகவேதான், நவீன இலக்கியப் புனைவில், இலட்சிய வாதக் கதையாக்க்கம், உள்ளது புனைதல் என்ற யதார்த்தத்தில் கட்டமைக்கப்பட்டு,இலட்சியவாத யதார்த்தம் என்றொரு புதுவகை எழுத்தாக இன்று பரிணாமம் கண்டுள்ளது.

(2)
ஒரு நிலப் பகுதியில் அரசியல் நிமித்தம் தேசியம் உருவாக்கப்படும் போது அப்பகுதி மக்கள் ஒரே திரளாய் அணிவகுத்து தம் இலட்சியத்தை அடையச் செயல்படுவது இலட்சியவாதஈயக்கம் ஆகும்.

இதே மனிதக் குழுவைக் கொள்ளை நோய் போன்ற பொது இடர்கள் கௌவும் போது அதக் களைய இவர்கள் ஒருமித்துக் காரியம் ஆற்றும் போது இலட்சியவாத தியாக உணர்வே இவர்களிடம் தூக்கலாக காணப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சார்ஸ் எனப்படும் உயிர்க்கொல்லி நோய் சிங்கப்பூரில் பரவிய சமயம், இங்குள்ள ஜனக்களில் பெரும்பாலோர், இனம், மதம், மொழி, பால் பேதங்களைக் கடந்து, ஒன்றுப் பட்டுப்பொதுத் துயரை துடைக்க தங்கள் உயிர்களையே பணயம் வைத்தனர்.

இந்தப் பேரிடரை மையப்படுத்திப் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற சிறுகதையை மாதங்கி புனைதுள்ளார். இவர் தம் கதையில் இலட்சியவாதத்தையும், யதார்த்தவாதத்தையும் எவ்வாறு நம்பகத்தன்ன்மையுடன் இணைத்து தம் படைப்பை ஒரு வெற்றி படைப்பாகத் தந்துள்ளார் என்பதை இனிப் பார்ப்போம். அதற்கு முன், அவர் எழுதிய கதையின் சுருக்கத்தை பார்ப்போம். கதை ஏற்கனவே இந்த வலைப்பூவில் பிரசுரமாகிவிட்டதால் இதற்கு அவசியமில்லை.

(3)
கதைத் தலைப்பு, கதைப் பொருள் முதலியவற்றுக்கு அழுத்தமும் நம்பகத்தன்மையும் தருவதற்கு பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் பாட்டு வரிகளை மாதங்கி தம் சிறுகதையில் எடுத்தாள்கிறார்.
“Best of the best” என்ற அர்த்தத்தில் தொனிக்கும் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற கோரிக்கைத் தலைப்பு வாக்கியம் மகாகவி பாரது எழுதிய புதிய ஆத்திச்சூடியில் இடம் பெற்றுள்ள ஒரு செய்யுள் வாக்கியம் ஆகும். டாக்டர் அரவிந்தன் நர்ஸ் யுகனேஸ்வரியை மனிதத் தொண்டு புரிய அழைக்கும் போது பெரிதினும் பெரிதான இந்தக் கோரிக்கையைத்தான் அவன் அவள் முன் வைக்கிறான்.

பெரிதுப் பற்றிப் பேசும் போது ஔவையாருக்கும் முருகப் பெருமானுக்கும்இடையே வினா-விடை பாணியில் நடைபெற்ற ஓர் உரையாடலையும் நாம் பொருத்திப்,பார்க்கலாம். இந்த வார்த்தையாடல் ஔவையாரின் தனிப் பாடல் பகுதியில் தொகுக்கப்ப்பட்டது.

வேல் முருகன் ஔவைப்பிராட்டியிடம் ‘பெரியது எது?” என்று கேட்கிறான். அதற்கு அவள்,”பெரியது கேட்கின் எரிதழக் வேலோய், பெரிது பெரிது புவனம் பெரிது ஆனால் புவனத்தை நான்முகன் படைத்தான். நான்முகக பிரம்மனோ விஷ்னுவின் மைந்தன். விஷ்ணுக் கடவுளோ தொண்டர் உள்ளத்து உடுக்கம். அதனால், தொண்டர் தம் பெருமைச் சொல்லவும் பெரிதோ!”, எண்ட்கிறாள்.

இறைவனுக்கும் தொண்டருக்கும் உள்ள இந்த நெருங்கிய தொடர்பைமனத்தை உருக வைக்கும் ஒரு தியாகக் காட்சி மூலம் கதை விவரிக்கிறது.
சார்ஸ் நோயினால் தீவிர பாதிப்படைந்த ஓர் அம்மையார் டான் டாக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுவரப் படுகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் முன் அவருடைய தொண்டை சளியை ஓர் இறிஞ்சுக் குழாயின் மூலம், அதை பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பவேண்டும். அன்றக்கு முன் தனம் தான் மற்ற சார்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த ஒரு டாக்டரும்,இரு நர்ஸ¤களும் நோய்த் தொற்று ஏற்பட்டு உயிர் துறந்திருந்தனர்.“இப்போது புதிதாக அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த அம்மையாரின் தொண்டையிலிருந்து சளியை யார் உறிஞ்சுக் குழாய் மூலம் எடுக்க முன் வர்கிறீர்கள்?”, என்று தலைமை மருத்துவர் ஜான் லாம் கேட்கும் போது, அந்த வார்டில் இருக்கும் நர்ஸ¤கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்துகிறார்கள்.அந்த நர்ஸ¤களுள் பலருக்கு சின்னஞ்சிறு குழந்தைகள் இருப்பதை அறிந்த டாக்டர் ஜான் லாம் உணர்ச்சிவசப்பட்டுக் கண் கலங்குகிறார்.

அந்த அம்மையாருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் அங்குள்ளவர்களிடம்” நீங்கள் எல்லாரும் மனிதர்களே அல்லர்; கடவுளின் பரதிநிதிகள்”, என்று கண்ணீர் மல்க, மனம் நெகிழ்ந்து கூறுகிறார்.
சில நாட்களில் அம்மையாரின் உயிர், அவர் உடலை விட்டுப் பிரிகிறது. ************
தன்னலம் பேணும் மனத்தையும், பொதுனலம் பேணும் மனத்தையும் வேறுபடுத்திக் காட்ட பாரதிதாசனின் ஒரு கவிதை கதையில் பயன்படுத்தப் படுகிறது.

அரவிந்தன் யுகனேஷ்வரியிடம் தொண்டூழியம் குறித்துப் பேசும் போது “ இந்தக் கவிதையைப் பார், யுகனேஷ்வரி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதியது”,. என்கிறான்.

‘தன் பெண்டு, தன் பிள்ளை, தன் சோறு, தன் வீடு, தன் சம்பாத்தியம், இவையுண்டு, தானுண்டு என்போன் சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன். ஊரார் நலன்கள் எல்லாம் எனக்கு இனிக்கும் கற்கண்டே என்போன் உள்ளம் கடுகுக்கு நேர் மூத்த துவரை உள்ளம்’, என்று தீட்டப்படும் பாரதிதாசன் பாடல் வரிகள், அவருடைய முழுக்கவிதைகள் அடங்கிய நூலில், புதிய உலகம் என்று பகுதியில், உலக ஒற்றுமை என்ற தலைப்பில் இடம் பெற்றஒரு எண்ணீர் விருத்தம் ஆகும். ******
குணப் பண்புகளைக் காட்டும் வகையில், கதையின் முக்கிய பாத்திரங்களுக்குத் தகுந்த பெயர்கள் சூட்டப்படுள்ளன.
கிஷ்கிந்தைப் பிரதேசம் மனிதக் குரங்குகள் வசித்த ஒரு புராதனக் காலத்து இடம் ஆகும். கரிசனமும் பாசமும் அற்ற, ரௌத்திரமும் ஆதிக்கமும் நிறைந்த, தன் சகோதரியின் வெளியேற்றத்தில் கூட, ஊடான் புட்டின் மீதே தன் பசித்த கண்களைப் பதிய விட்டிருக்கும் ஒருவனுக்குக் கிஷ்கிந்தன் என்ற நாமகரணம் பொருத்தமாகவே சூட்டப் பட்டிருக்கிறது.

யுகன் என்ற யுகத்திற்கு ஈஸ்வரியாக இருப்பவள் யுகனேஷ்வரி. உலகத்தினருக்குக் கருணை காட்டுபவளாக, தியாகம் தேவைப்படும் ஒரு கால அளவு கொண்ட யுகத்திற்கு உரியவளாக அவள் இருப்பதால், கதாநாயகிக்குயுகனேஷ்வரி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அமரர் நா.பார்த்தசாரதி படைத்த ஓர் இலட்சியவாத நாவல் ‘குறிஞ்சி மலர்’. அதில் உலவும் அரவிந்தன் ஓர் இலட்சியப் பாத்திரம். அவன் பண்பை நினைவு கூர்வது போன்று, மனிதச்சேவையை நாடும் கதாநாயக டாக்டருக்கும், அரவிந்தன் என்று பெயர் இடப்பட்டிருக்கிறது. ********** யுகனேஷ்வரி,கிஷ்கிந்தன், அவர்களின் அம்மா ஆகியோர் இந்தியத் தமிழர்கள். யுகனேஷ்வரியின் அறைத் தோழி அலின் வாங், அவளுடைய தந்தை திரு.டேவிட் வாங், யுகனேஷ்வரியின் தலைமை டாக்டர் ஜான் லாம், அவளோடு பணி புரியும் மோளி, அவள் பயணம் செய்யும் வாடகைக்கார் ஓட்டும் மகம்மது நசீம் ஹீசைன் முதலியோர் சிங்கப்பூர் ம்க்களைப் பிரதினிதிக்கும் தமிழர்கள் அல்லாத மற்ற இனத்தவர்கள்; மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள். **********வாடகைக் காரோட்டியின் பேச்சு எந்தப் பாஷையில் நடைபெற்றதுஎன்று சொல்லப்படவில்லையென்றாலும் திரு. டேவிட் வாங்,” ஹவ் ஆர்யூ மை சைல்ட்?”, என்று யுகனேஷ்வரியிடம் அன்புடன் தொலைபேசியில் விசாரிப்பது, ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. ஆங்கில மொழி இங்கு மற்ற இனத்தாரோடு பேசுகின்ற ஒரு தொடர்பு மொழியாகப் பயன்படுவதைக் கதை சுட்டுகிறது. ***********
மூன்று மாதங்கள் சார்ஸ் நோய் சிங்க்கப்பூரை அச்சுறுத்திய போது, பெரும்பாலான மக்களிடத்தில் ஓங்கியிருந்த தியாக உணர்வு, பலவகைகளில் கதை நெடுகப் பெருமிதத்துடன் கொண்டாடப்படுகிறது. வாடகைக்காடியில் யுகனேஷ்வரி பயணிக்கும் போது, அவள் சார்ஸ் நோயாளிகலைக் கவனிக்கும் ஒரு தாதி என்பதை அறிந்து டாக்ஸி ஓட்டுனர் அவளிடம் பயணக்கட்டணம் வாங்க மறுத்து விடுகின்றார். அவரைப் போற்றும் வகையில், அவர் பெயர், அவருடைய காரின் எண் முதலியவற்றைக் குறிப்பிட்டு, ஆங்கில நாளிதழ் “தி ஸ்ரெயிட்ஸ் டைம்ஸ¤க்குச் செய்தி அனுப்புகிறாள் யுகனேஷ்வரி.
நன்றி கூறும் செயல்கள் மேலும் தொடர்கின்றன. எம்.ஆர்.டி இரயில் நிலையங்களுக்கு வெளியே உள்ள பலககைகளில் சார்ஸ் நோயாளிகளைப் பராமரிக்கும் மருத்துவ அன்பர்களுக்கு நன்றி வார்த்தைகள் எழுதி, பொதுமக்கல் தங்கள் கையெழுத்துக்களை இடுகிறார்கள்.

மருத்துவமனைகளில் வாழ்த்துகளும், மலர்க்கொத்துகளும் வந்து குவிகின்றன. ஆறுவ்யதுச் சிறுமி ஒருத்தி தானே தயாரித்த ஒரு வண்ண அட்டிஅயில், தாதியர் படங்கள், மருத்துவ உபகரணப் படங்கள் முதலியவற்றை வரைந்து அனுப்புகிறாள். அது ஒரு மருத்துவ அறிவிப்புப் பலகையில் ஒட்டப்ப்ட்டு, அங்கு நீண்ட கலம் வாசம் புரிகிறது.

சார்ஸ் நோய் சிங்கப்பூரை உலுக்கிய அந்த மூன்று மாதங்களில் வெளிநாடுகளில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளை, ஏராக் போர், இந்தோனேசியத் தீமோர் பிரிவினைக் கலவரங்கள், இயற்கையின் சீற்றங்கள் வெள்ளம், பூகம்மபம், என்று கதாசிரியர் குறிப்பிடுவதும், சார்ஸ் நோய் தணிந்து சிங்கப்பூர் சீரடந்து வருவதை அங்கங்கே ‘கூல் சிங்கப்பூர்’ ‘சிங்கப்பூர் இஸ் ஓகே” என்ற வரிகள் முழங்குகின்றன. என்று கூறுவதும், கதையின் பிண்ணனி யதார்த்ததுக்கு வலு சேர்க்கின்றன, ***********
கதை முழுவதும் நம்பகத்தன்னமையுடன் அமந்துள்ளது. அண்ணன் கிஷ்கிந்தனோடு யுகனேஷ்வரி தங்கியிருந்தாலும், அவளுக்குத் திருமணம் இராண்டு கழித்தே நடைபெறும். டாக்டர் அரவிந்தனோடு வாலண்டரி தொண்டூழியும் செய்ய மூன்றாம் உலக நாடுகளுக்கு அவள் செல்லப் போவதும் ஈராண்டு விடுப்பில் தான். அரவிந்தனின் உள்ளத்தை நன்கு உணர்ந்திருந்தஅவளே விண்ணப்பத் தாளைப் பெற்று, முன் கூட்டியே அதில் கையெழுத்திட்டு அவனை அவள் சந்திக்க வருகிறாள். எனினும் அவளிடம் தன் திருமணம் குறித்து ஒரு துளி எதிர்பார்ப்பு இருந்திருக்க வேண்டும். ‘அரவிந்தன் பேசிக் கொண்டே போனான். அவள் இரண்டு கண்களிலிருந்தும் தாரையாக தாரையாகக் கண்ணீர்”, என்றும் அன்று அவள் தன்னை எளிமையாக, ஆனால் அழகாக அலங்கரித்துக் கொண்டு வந்தாள்’, என்றும் கதையில் குறிப்பிடப்படும் வரிகள், சார்ஸ் காலத்திற்குப் பின்னர், அரவிந்தன் தன்னைத் திருமணம் செய்து கொள்வான் என்று யுகனேஷ்வரி எண்னியிருக்கக் கூடும் என்ற இலட்சியம் மீறிய யதார்த்த அம்சத்தைக் கோடிடுகின்றன.

டாக்டர் அரவிந்தன் விய்ட்னாம் போன்ற நாட்டிற்கு மருத்துவத் தொண்டூழியம் புரிய புறப்படுவது, கதையில் இலட்சியவாதத்தை நிறுவினாலும் அவன் செய்கை நடை முறையில் சாத்தியப்பாடு உடைய ஒன்றுதான்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையைச் சேர்ந்த பிளாஸ்ட்டிக் அறுவை நிபுணர் டாக்டர் லீ செங் டெய்க் என்பவர், லாவோஸ், மியன்மார் போன்ற தேசங்களுக்கு தம் மருத்துவக் குழுவினரோடுச் சென்றுசங்குள்ள ஐந்நூறுக்கும்மேலான ஏழை எளியவர்களின் பிளவுப்பட்ட உதடுகளையும், உள்வாயின் மேலண்ணக் குறைபாடுகளையும் தம் பிளாஸ்ட்டிக் சர்ஜரி மூலம் குணப்படுத்தியிருப்பதை அறிந்து அவரி சிங்கப்பூர் சர்வதேச அறக்கட்டளையினர் சமீபத்தில் அதிபர் எஸ் ஆர் நாதன் வாயிலாகக் கௌரவித்துள்ளனர்.டாக்டர் லீ செங் டெய்க்கின் வாலிண்டியர் சேவை கதைத் தலைவன் டாக்டர் அரவிந்தன் செய்யவிருக்கும் தொண்டுச் செயலும் யதார்த்தமான ஒன்றுதான் என்பதை மெய்ப்பிக்கிறது.

தன்னலமற்ற பொதுநலப் பின்புலத்தில் பெரும்பாலான இலட்சியப் பாத்திரங்கள் இயங்கப்பெற்று, நம்பகத்தன்மை வாய்ந்த பல கூடுகளைப்’ பெரிதினும் பெரிது கேள்’ என்ற சிறுகதை தன்னகத்தே பொதிந்திருப்பதால், இந்தப் புனைவு ‘இலட்சிய யதார்த்தம்’ என்னும் எழுத்து வகைக்கு ஒரு நல்ல மாதிரியாக விளங்குகிறது என்று கூறலாம்.

( இந்த நூல் விமர்சனம் பெரிதினும் பெரிது கேள் என்ற சிறுகதைக்குதிரு. ராம கண்ணபிரான் எழுதி அங் மோ கியோ நூல் நிலையத்தில் நவம்பர் பன்னிரெண்டாம் தேதி 2006 அன்று வாசிக்கப்பட்டது)

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு