வண்ணதாசன் சிறுகதைகள்’ - என் வாசிப்பனுபவம்

‘வண்ணதாசன் சிறுகதைகள்’ - என் வாசிப்பனுபவம்இராம.வயிரவன், Sunday 10-Feb-2008------------------------------------------------------------------------------------------------------------------------

என்னைப் படிக்கத்தூண்டிய வரிகள்: ‘கிருஷ்ணன் வைத்த வீடு’ சிறுகதைத் தொகுப்பில் என நினைக்கிறேன் - ‘இந்த பலூன் விக்கிற முருகேசனை விட நான் என்ன வாழ்ந்து கிழித்துவிட்டேன்’ - இந்த முன்னுரை வரிகள்தான் என்னை இவரின் கதைகளைப் படிக்கத்தூண்டிய வரிகள்.

நன்றி: ரமேஷின் ‘வண்ணதாசன் சிறுகதைகள்’ பற்றிய குறிப்புக்களுடன், பாண்டியனின் இந்த வாசகர்வட்டத்திற்கான மின்மடல் அழைப்பைப் பார்த்தவுடனேயே நான் முடிவு செய்துவிட்டேன் இதில் கலந்துகொண்டு என்வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்று. காரணம் வண்ணதாசன் கதைகள் எனக்குள் ஏற்படுத்திய வாசிப்பனுபவம்தான். வண்ணதாசன் கதைகளைத் தேர்வு செய்தவர்களுக்கு நன்றி.

பலமுறை முயற்சித்தும் இவரின் நூல்கள் கிடைக்கவில்லை, அதனால் மீண்டும் வாசிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை ஆனாலும் முன்பு படித்தபோது ஏற்பட்ட நினைவடுக்குகளிலிருந்து சில குறிப்புக்கள் மற்றும் வாசிப்பனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அதனால் குறிப்புக்களில் தவறுகள் இருந்தால் நண்பர்கள் சுட்டிக்காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கதைக்கரு: கதைக்கருவாக வாழ்வியல் முரண்களையும், மெல்லிய உணர்வுகளையும் ஆசிரியர் அழகான கதைகளாக்கி விடுகிறார். ‘ஒரு நிலைக்கண்ணாடி..சில இடவல மாற்றங்கள்’ என்கிற கதையில் அக்காள் தங்கை இருவரின் முரண்பட்ட கேரக்டரை ஒப்பிடுகிறார். ‘ஒருமரம் ..சில மரங்கொத்திகள்’ என்கிற கதையில் ஒரு கிழவி தான் வளர்த்த மாமரத்தின் மேல் கொண்டுள்ள பற்று அறிந்து அவளுக்குப் பிறகு அனுமதிக்கப் பட்டும் முடிவை மாற்றிக்கொண்டு மரத்தை வெட்டாமல் விட்டுபோகிறது கதையாகிறது.
கதை சொல்லுகிற உத்தி:இவர் கதைகளில் இவரின் கதை சொல்லுகிற உத்தி எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காக இவரின் கதைகளைப் பலமுறை படித்திருக்கிறேன். அப்படிப்படித்த கதைகளில் ஒன்று ‘ஒட்டுதல்’ என்கிற சிறுகதை.
ஒட்டுதல்கணவனைப் பறிகொடுத்த பெண் ஒன்னரை மாதத்தில் மீண்டும் வேலைக்குச் செல்லுகிறபோது நடக்கிற நிகழ்வு கதையாகி விடுகிறது. துக்கம் வெல்ல ‘ஒட்டுதல்’ தேவை என்பது கரு.

நினைவுகளும் நிகழ்வுகளுமாக கதை சொல்லப்படுகிறது. நினைவுகளையும் நிகழ்வுகளையும் பிணைக்கிற இடங்கள் அருமை. சில விசயங்கள் நேரடியாகச் சொல்லாமல் சில குறிப்புக்களிலிருந்து வாசகர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆரம்பமும் முடிவும்: இவர் கதைகளில் கதையின் ஆரம்பமும் முடிவும் அழகாக, பொருத்தமாக அமைந்திருக்கின்றன.‘ஒருமரம் ..சில மரங்கொத்திகள்’ - என்கிற கதை ‘எந்த மரத்தை வெட்டப்போகிறோமோ அந்த மரத்தின் நிழலிலேயே கோடறிகள், அறிவாள் எல்லாவற்றையும் வைக்கவேண்டியிருந்தது..’ என்று ஆரம்பிக்கும்.

‘ஒரு நிலைக்கண்ணாடி..சில இடவல மாற்றங்கள்’ என்கிற கதையில் ஆரம்பம் - ‘உங்க வீட்டு மச்சிலே ஒரு நிலைக்கண்ணாடி உண்டே அது இன்னமும் இருக்கா அக்கா?’ என்று தங்கை அக்காளிடம் கேட்பதாக ஆரம்பிக்கும். முடிவு ‘..அப்படியெல்லாம் நாங்களும் உட்கார்ந்து பேசினோம் என்றால் நாங்களும் இடையில் எங்காவது சிரிப்போம் இல்லையா? அந்த சிரிப்பு எப்படி இருக்கும்? இன்னும் இருக்கிறதா என்று மீனா கேட்டாளே எங்க வீட்டு நிலைக்கண்ணாடி - அதில் பார்த்தால் ஒரு வேளை தெரியுமோ?’ என்று கதை முடியும்.

நடை: திகட்டாத பொருத்தமான நடை கதைகளுக்கு அழகூட்டுகின்றன.
‘விதை பரவுதல்’ - ‘திறந்த கதவின் மூலமாக உள்ளே ஓடி வரப்போவது போல தரையிலிருந்து தெறிக்கிற மழைத்துளி முட்டியது’ என்ற வரிகள் வரும்.

‘ஒருமரம் ..சில மரங்கொத்திகள்’ - கதையில் - ‘நசநசவென்று மாமரத்தின் வாசம் காற்றில் ஒரு எட்டு கூட எடுத்து வைத்திருக்காது. அதற்குள்..’ என்கிற வரிகள்- ‘விளக்கை உரசினால் பூதம் வருவது மாதிரி மாவிலையைக் கசக்கினால் ஆயா வருமோ,..’ என்கிற வரிகள்‘ஒட்டுதல்’ - கதையில்- ‘ஒருவரை ஒருவர் நகர்த்திக் கொண்டது போல எல்லோரும் வாசலுக்கு வந்தார்கள்’ என்கிற வரிகள்.- ‘கைகளைக் கூப்பினாளே தவிரக் கும்பிடுகிற மனநிலை இல்லை..’ என்கிற வரிகள்- ‘கண்ணாடி பார்த்தாள். பொட்டில்லா நெற்றி மட்டும் தெரிந்தது.’ என்கிற வரிகள்
இவையெல்லாம் இவர் கதைகளைப் படித்தபோது பிடித்துப்போய் மனதில் தங்கிப்போன வரிகள்.

என் யோசனை: வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் இவரின் கதைகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு தங்களின் எழுத்தை மேலும் செம்மைப் படுத்திக் கொள்ளலாம் என்பது என் யோசனை.

-சுபம்-

4 மறுமொழிகள்:

At , Blogger T.V.ராதாகிருஷ்ணன் மொழிந்தது...

ivaradhu "chinnu mudhal chinnu varai" kidaiththaal padikkavum

 
At , Blogger மானஸாஜென் மொழிந்தது...

நண்பரே "சின்னுமுதல் சின்னுவரை", என்னுடைய நண்பர் பார்த்தீபனால் முதன் முதலாக பதிப்பிக்கப் பட்டு அதை நண்பர்களிடையே விற்ற அனுபவம் இருக்கிறது. :)

-மானஸாஜென்

 
At , Blogger முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் மொழிந்தது...

வண்ணதாசன் எழுத்து கவிதை போன்றதல்லவா..!! நிதர்ச்சனமான வாழ்வின் தனி நிமிடங்களை அவரை போல எழுதி நான் பார்த்ததில்லை. என்னிடம் தொகுப்புகள் கிடையாது - பத்திரிக்கைகள் வாயிலாக படித்ததுதான் - எனினும் மிகவும் மதிப்பு கொண்டிருக்கிறேன்.

 
At , Anonymous sisulthan மொழிந்தது...

http://vannathasan.wordpress.com/2010/11/16/206/

 

Post a Comment

<< முகப்பு